பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சீராநத்தம், நொச்சிக்குளம், திம்மூர், கொளத்தூர், கூடலூர், குரும்பாபாளையம், தெரணி, அயினாபுரம், கொளக்காநத்தம் ஆகிய கிராமங்களில் ரூ. 6.37 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாடு, நீர்நிலைகளை துார்வாரி ஆழப்படுத்துதல், சிமெண்ட் களம் அமைத்தல் போன்ற பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளுக்கு மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று (05.09.2023) மாவட்ட ஆட்சியர் க.கற்பகம், தலைமையில் அடிக்கல் நாட்டினார். மேலும் இரசுலாபுரம் ஊராட்சியில் ரூ.6.14 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்டப் பாலத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்வுகளில் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ந.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் முன்னிலை வகித்தார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குரும்பாபாளையம் ஊராட்சி

ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் சாப்பிட்டு பார்த்து ஆய்வு மேற்கொண்டு, மாணவ,மாணவிகளுடன் கலந்துரையாடினார்கள். இந்நிகழ்வுகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லலிதா, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் கலைவாணி, ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பூங்கொடி , இமயவரம்பன், வட்டாட்சியர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

