தூத்துக்குடி சோரீஸ்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தை திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி எம்பி கனிமொழி கருணாநிதி தொடங்கி வைத்தார். இப்பள்ளியில் காலை உணவாக கிச்சடி, கேசரி வழங்கப்பட்டது. மாணவர்- மாணவிகளுக்கு உணவை பரிமாறிய கனிமொழி எம்.பி, தொடர்ந்து அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
தொடக்க விழா நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் கி.செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி சார் ஆட்சியர் கவுரவ்
குமார், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) வீர புத்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
நாகை மாவட்டம் திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை இன்று காலை தொடங்கி வைத்தார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படித்த பள்ளியில் இத்திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இதைத்தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சர் உணவு பரிமாறினார். தனது அருகே அமர்ந்திருந்த மாணவர்களின் குடும்ப விவரங்களை கேட்டறிந்தார். பள்ளி மாணவர்களுடன் அமர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவை சாப்பிட்டு ருசி பார்த்தார். காலை உணவு திட்ட விரிவாக்கத்தால் 31 ஆயிரம் அரசு பள்ளியில் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்.