சென்னை சென்ட்ரலில் இருந்து கடந்த 5-ம் தேதி டெல்லி நோக்கி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் ஆக்ரா ரயில் நிலையத்தை நெருங்கும்போது முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டியில் சிவப்பு நிற ராலி சூட்கேஸ் கேட்பாரற்று கிடந்தது. அதை ஆக்ரா ரயில்வே போலீசார் கைப்பற்றி திறந்து பார்த்தபோது தலை மற்றும் கைகள் இல்லாமல் பெண்ணின் சடலம் துண்டு, துண்டாக வெட்டி 2 கவரில் சுற்றி வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
விசாரணையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மூக்கு கண்ணாடி போட்டிருந்த ஒரு இளம்பெண்ணும், குறுந்தாடி வைத்திருந்த ஒரு இளைஞரும் அந்த சூட்கேஸை வைத்துவிட்டு தலைமறைவானதும் அவர்கள், கூடுவாஞ்சேரியில் இருந்து சென்ட்ரல் வந்த மின்சார ரயிலில் சூட்கேசுடன் பயணம் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து கூடுவாஞ்சேரி போலீசார் உதவியுடன் ஆக்ரா போலீசார், கூடுவாஞ்சேரி மசூதி அருகே பூட்டியிருந்த ஒரு வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது, பிரியாணி செய்யக்கூடிய டபராவில் ரத்தமும், மேல் மூடியில் மைதா மாவும் இருந்ததை கண்டு திடுக்கிட்டனர். அதை கைப்பற்றி ரத்த சோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், ஒடிசாவை சேர்ந்த ஹயத்துன்நிஷா (38), சென்னையை சேர்ந்த ஜகுர்கான் என்பவரை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒடிசாவில் திருமணம் செய்தார். பின்னர் சென்னைக்கு வந்துள்ளனர். இவர்களுக்கு யூசுப்கான் (19) என்ற மகன் உள்ளார். இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக கணவர் பிரிந்து சென்றதால் மகனுடன் ஆயத்துன்நிஷா தனியாக வசித்துள்ளார். அப்போது, காதலன் ராகுல் என்பவரை திருமணம் செய்ய போவதாக ஹயத்துன்நிஷா கூறியதால், கோபத்தில் மகன் ராகுலும் பெருங்குளத்தூரில் தனியாக வீடு எடுத்து தங்கினார். அதற்கு பிறகு, கூடுவாஞ்சேரி மசூதி அருகில் முகமதுரபி என்பவரது வீட்டில் ஹயத்துன்நிஷா தங்கினார்.
இந்நிலையில், கடந்த ஜூலை 3ம் தேதி ஹயத்துன்நிஷாவை பார்க்க ஒரு ஆண், பெண் வந்தனர். அவர்கள் பற்றி வீட்டு உரிமையாளர் விசாரித்தபோது, ‘என் தம்பி, அவரது மனைவி’ என்று ஹயத்துன்நிஷா கூறியுள்ளார். பின்னர் திடீரென அந்த தம்பதியினர் வீட்டை பூட்டி விட்டு செல்ல முயன்றபோது, வீட்டு உரிமையாளர் விசாரித்துள்ளார். அப்போது, ‘எனது அப்பா உடல் நிலை சரியில்லாமல் இருந்தார். அதனால் ஹயத்துன்நிஷா சென்று விட்டார். தற்போது அப்பா இறந்து விட்டதால் நாங்கள் செல்கிறோம்’ என்று கூறியுள்ளனர். இதற்கிடையேதான் ஆக்ரா ரயில் நிலையத்தில் பெண்ணின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில், கூடுவாஞ்சேரி போலீசில் ஹயத்துன்நிஷா மாயமானதாக அவரது மகன் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் மணிப்பூரில் பதுங்கி இருந்த முக்கிய குற்றவாளிகளான அசாம் மாநிலத்தை சேர்ந்த மானிக்உதின்லஸ்கர் (22), அவரது காதலி பகபதிமாஜி ஆகியோரை நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் கைது செய்து சென்னைக்கு கொண்டு வந்தனர். பின்னர், கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் வைத்து வண்டலூர் போலீஸ் உதவி கமிஷனர் சேகர்பாபு, கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர். இதில் வெளியான பரபரப்பு தகவல் பற்றி போலீசார் கூறியதாவது:
கொலையான ஹயத்துன்நிஷாவுடன் ராகுல் என்ற மானிக்உதின்லஸ்கர் நெருங்கி பழகினார். நாளடைவில் கள்ளக்காதலானது. இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இது மானிக்உதின்லஸ்கரின் மனைவி பகபதி மாஜிக்கு தெரியவந்தது. இதனால் தம்பதிக்குள் மோதல் ஏற்பட்டது. இதனை காரணமாக வைத்து ஹயத்துன்நிஷாவிடம் பகவதிமாஜி அடிக்கடி பணம், நகை வாங்கியுள்ளார். இந்நிலையில், ஹயத்துன்நிஷா கர்ப்பமடைந்தார். இது பகபதி மாஜிக்கு தெரியவந்தது. இதனையடுத்து ராகுல் என்ற மானிக்உதின்லஸ்கரிடம் திருமணம் செய்து கொள்ளும்படி ஹயத்துன்நிஷா வலியுறுத்துள்ளார். ஆனால் வயது வித்தியாசம் இருப்பதால் மறுத்துள்ளார். இதையடுத்து, சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதாக ஹயத்துன்நிஷாவின் வீட்டிற்கு வந்த தம்பதியினர், 2 வாரம் தங்குவதுபோல் தங்கிவிட்டு இந்த கொ*யை அரங்கேற்றியுள்ளனர்.
இதற்காக பல்லாவரம் சந்தையில் இருந்து ஆடு வெட்டும் கத்திகளை வாங்கி வந்தனர். பின்னர், இரவில் தூங்கும்போது ஹயத்துன்நிஷாவின் முகத்தில் மயக்க மருந்து தெளித்து அவரது கழுத்து அறுத்து கொலை செய்துள்ளனர். அந்த ரத்தத்தை பிரியாணி செய்யக்கூடிய டபராவில் பிடித்துள்ளனர். பின்னர் மின்விசிறியில் கட்டி தலைகீழாக கட்டி தொங்கவிட்டு ஆட்டின் தோலை உரிப்பதுபோல் உரித்து அனைத்து உடல் பாகங்களையும் துண்டு துண்டாக வெட்டி, தலையை மொட்டை அடித்தும், தோலை உரித்தும், இரு கண்களையும் பிடுங்கி அதனை 2 கவரில் போட்டு ராலி சூட்கேசில் எடுத்துக்கொண்டு சென்ட்ரலுக்கு மின்சார ரயிலில் பயணம் செய்துள்ளனர். பின்னர், டெல்லி நோக்கி சென்ற ஆக்ரா ரயிலில் ஏற்றி அனுப்பிவிட்டு சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளனர். இந்த விவகாரம் தெரிந்ததும், மணிப்பூருக்கு தப்பி சென்று ஒரு வீட்டில் பதுங்கியிருந்தனர். கைது செய்யப்பட்ட தம்பதியை கொலை நடந்த வீடு, கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அழைத்து சென்று எப்படி கொலை செய்தீர்கள் என்று நடித்துக்காட்டவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
மேலும் இந்த கொலையை பவாரியா கேங்க் போன்று கணவன், மனைவியுடன் சேர்ந்து மேலும் 4 பேர் கொலை செய்ததாகவும், பிடிபட்ட கணவன், மனைவி அரியானாவை சேர்ந்தவர்கள் என்றும், கொலை செய்துவிட்டு காரில் தப்பியதாகவும் கூறப்படுகிறது. இந்த கொலைக்கான பின்னணி தகவல்கள் இன்று மாலைக்குள் தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
