அரியலூர் மாவட்டம், தாமரைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லமுத்து மகன் ரமேஷ் (24) என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான வெங்கடேசன் (30) என்பவருக்கும் இடப் பிரச்சினை சம்பந்தமாக தகராறு இருந்துள்ளது.இதன் காரணமாக கடந்த 2020 ஆகஸ்ட் 16-ம் தேதி பிரச்சனை ஏற்பட்டு அப்போது வெங்கடேசன் தான் வைத்திருந்த அரிவாளை கொண்டு ரமேஷை வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அளித்த புகாரின் பேரில், அரியலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, ரவுடி வெங்கடேசனை கைது செய்தனர்
இந்த வழக்கு அரியலூர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில், மத்திய மண்டல காவல்துறை தலைவர் G.கார்த்திகேயன் மற்றும் சரக காவல்துறை துணைத் தலைவர் P.பகலவன் மேற்பார்வையில், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா வழிகாட்டுதலின் படியும், ரவுடி வெங்கடேசனுக்கு எதிராக அரியலூர் காவல் ஆய்வாளர் சகாய அன்பரசு, அனைத்து சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை அளித்ததின் அடிப்படையில், அனைத்தையும் கேட்டறிந்த மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி திரு. சரவணன், வெங்கடேசனை குற்றவாளி என தீர்மானித்து அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 5000/- அபராதம் விதித்தார். அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.