ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட திருவரங்கம்,திருவானைக்காவல் பகுதி பொதுமக்களின் குறைதீர்க்கும் முகாம் இன்று திருவானைக்காவலில் நடைபெற்றது அமைச்சர் ரமேஷ் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்
பின்னர் அமைச்சர் ரமேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், அமைச்சர்களும் அதிகாரிகளும் நேரடியாக மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அதன்படி, இன்று ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்கோவில் பகுதிகளில் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த முகாமில் அனைத்துத் துறை அரசு அதிகாரிகள், திருச்சி மாநகராட்சி மற்றும் வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். பொதுமக்கள் பட்டா பிரச்சினைகள், குடிநீர் வசதி, கால்வாய் பராமரிப்பு, வேலைவாய்ப்பு, வீட்டு வசதி, மருத்துவ வசதிகள், மகளிர் உரிமைத்தொகை, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் தொடர்பாக மனுக்கள் அளித்துள்ளனர்.
ஒவ்வொரு மனுவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து, உடனடியாக தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த முகாம் ஒரு நாள் நிகழ்வாக இல்லாமல், அடுத்த சில நாட்களில் மணிகண்டம், அந்தநல்லூர் உள்ளிட்ட ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியின் அனைத்து பகுதிகளிலும் நடைபெறும். இனி குறிப்பிட்ட கால இடைவெளியில் இதுபோன்ற மக்கள் குறைதீர்ப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும்
ஸ்ரீரங்கம் கோயிலின் கிழக்கு கோபுர வாசல் திறப்பு குறித்து கேட்டபோது, அந்தப் பணிகளில் சில தாமதம் ஏற்பட்டிருந்தது. தற்போது சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி பணிகளை விரைவுபடுத்தியுள்ளோம். மிக விரைவில் பணிகள் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள கோயில்களின் அடிப்படை வசதிகள், பக்தர்களுக்கான வசதிகள், திருப்பணிகள், பராமரிப்பின்றி உள்ள கோயில்கள், சேதமடைந்த மண்டபங்கள், கோபுரங்கள், திருக்குளங்கள் உள்ளிட்ட அனைத்தையும் மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆன்மிகமும் தமிழும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. இதை கருத்தில் கொண்டு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.
திருச்செந்தூர் கோயில்களில் கட்டண உயர்வு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு,
தற்போது எந்த கட்டண உயர்வும் அமல்படுத்தப்படவில்லை. சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். ஏற்கனவே இருந்த நடைமுறைகள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. மக்களின் கருத்தின் அடிப்படையில்தான் இறுதி முடிவு எடுக்கப்படும். மக்கள் விரும்பவில்லை என்றால் அது கைவிடப்படும். மக்களின் விருப்பத்திற்கு மாறாக எந்த முடிவும் இந்த அரசு எடுக்காது.
சில கோயில்களில் விஐபி தரிசனம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து, அனைத்து கோயில்களிலும் விஐபி தரிசன முறையை ஒழுங்குபடுத்துவது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீரங்கம் கோவிலில் குறிப்பிட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
திருச்செந்தூர் கோயிலில் மாற்றம் இல்லை என்ற குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர், தற்போது 70 முதல் 80 சதவீதம் வரை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அனைத்து மாற்றங்களையும் ஒரே நேரத்தில் கொண்டு வர முடியாது. தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு மீதமுள்ள பிரச்சினைகளும் தீர்க்கப்படும்.
யாத்திரி நிவாஸ் முன்பதிவுக்காக போலி இணையதளங்கள் மூலம் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில், தானே நேரடியாக காவல்துறையில் புகார் அளித்ததாகவும், அதன்பேரில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும். இனி அதிகாரப்பூர்வ ஆன்லைன் முன்பதிவு இணையதளம் அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
மக்கள் அளிக்கும் மனுக்களுக்கு தேவையான நிதி குறித்து கேட்டபோது, பெரும்பாலான கோரிக்கைகள் மிகப்பெரிய நிதி தேவைப்படும் திட்டங்கள் அல்ல. குடிநீர், தெருவிளக்கு, கால்வாய் சீரமைப்பு, வேலைவாய்ப்பு, மருத்துவ வசதி, ஓய்வூதியம், உரிமைத்தொகை போன்ற அடிப்படை தேவைகளே அதிகம். இதற்கான நிதி அரசின் வழக்கமான திட்டங்களின் மூலமே ஒதுக்கப்பட்டு தீர்வு காணப்படும்.
அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்குவது மட்டுமல்லாமல், அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் தொடர்ந்து ஆய்வு செய்து, வாரந்தோறும் மற்றும் மாதந்தோறும் பணிகளை கண்காணித்து வருவதால், மக்கள் கோரிக்கைகள் விரைவாக நிறைவேற்றப்படும்.
பல்வேறு கோயில்களில் நேரடியாகவும், ஊடகங்களுக்குத் தெரியாமலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றின் அடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவை அனைத்தும் கட்டம் கட்டமாக அறிவிக்கப்படும்.
ஸ்ரீரங்கம் கோயிலில் வாகன நிறுத்த வசதி குறித்து, அதற்கான இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. பக்தர்களின் வசதிக்காக தேவையான திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும்.
திருச்சி மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு குறித்து ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடனும் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. சட்டவிரோத விற்பனைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும், குறிப்பாக இரவு நேர ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தவும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இளைஞர்களை பாதிக்கும் மது மற்றும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்
