Skip to content
Home » ஆந்திராவில் மிக்ஜம் புயல்….. நெல்லூர் வெள்ளத்தில் தத்தளிக்கிறது

ஆந்திராவில் மிக்ஜம் புயல்….. நெல்லூர் வெள்ளத்தில் தத்தளிக்கிறது

  • by Senthil

வங்கக்கடலில் உருவான மிக்ஜம் புயல் காரணமாக  தமிழ்நாட்டில் 21 இடங்களில் அதி கனமழையும், 59 இடங்களில் மிக கனமழையும், 15 இடங்களில் கன மழையும் பெய்து இருக்கிறது. இதில் அதிகபட்சமாக சென்னை பெருங்குடியில் 29 செ.மீ. மழை பெய்திருந்தது. அதற்கடுத்தபடியாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 28 செ.மீ. மழையும் பதிவாகியது. நேற்று காலையும் சென்னையில் மழை தொடர்ந்தது. இடைவிடாமல் பெய்த மழையினால் சென்னை மாநகர் முழுவதும் ஸ்தம்பித்து போனது. அதிகனமழை ஒரு பக்கம் இருந்தாலும், தரைக்காற்றின் தாக்கமும் அதிகளவில் இருந்தது.

மாலையில் வளிமண்டலத்தின் கீழடுக்கில் வடமேற்கு திசை காற்று, மேற்கு திசை காற்றாகவும், நடுப்பகுதியில் வடதிசை காற்று, வடமேற்கு திசை காற்றாகவும், மேலடுக்கில் வடகிழக்கு திசை காற்று, வடமேற்கு திசை காற்றாகவும் மாறியது. இதனால் மிக்ஜம் புயல், சென்னை பகுதிகளை கடந்து விலகிச் செல்ல தொடங்கியது. புயல் விலகிச் சென்றாலும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நள்ளிரவு வரை மழை பெய்த வண்ணமே இருந்தது.

அதனையடுத்து முதலில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை குறையத் தொடங்கியது. அதன் பின்னர், சென்னையில் நள்ளிரவுக்கு பிறகு ஓரளவுக்கு மழை குறைந்தது. இந்நிலையில் மிக்ஜம் புயல் இன்று காலை தெற்கு ஆந்திர பகுதியை அடைந்து, காலை  11.30 மணிக்குள் நெல்லூர்-மசூலிப்பட்டினத்துக்கு இடையே தீவிர புயலாக கரையை கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் இருந்து படிப்படியாக நகரத் தொடங்கிய மிக்ஜம் புயல், தற்போது நெல்லூர் கடற்கரையை நெருங்கியுள்ளது.    நெல்லூருக்கு 20 கி.மீ. வடக்கு – வட கிழக்கே மிக்ஜம் புயல் மையம் கொண்டுள்ளது. இதனால் நெல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு முதல்  மழை  கொட்டி தீர்க்கிறது. இதனால் நெல்லூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!