சென்னையின் புறநகர் பகுதிகளான பெரும்பாக்கம், படப்பை, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
மக்களோடு மக்களாக வசித்து வரும் நபர்கள், தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் உள்ள நிலையில் மாநில போலீசார் பாதுகாப்புடன் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனைக்கு பின்னரே முழுமையான தகவல் அளிக்கப்படும் என என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முன்னா என்பவரது வீட்டிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் முன்னாவும், அவருடன் தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த சராபுதீன் என்பவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சராபுதீன், வங்க தேசத்தை சேர்ந்தவர். அவர் திரிபுராவை சோ்ந்தவர் போல போலி ஆதார் அட்டைதயாரித்து இங்கு வேலை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தவிர கொல்கத்தைவை சேர்ந்த மியான் என்பவரும் இங்கு தங்கியிருந்தது தெரியவந்தது. அவரையும் அதிகாரிகள் கைது செய்தனர். இவரும் முன்னாவின் நண்பர் என கூறப்படுகிறது. இவர் ஏன் இங்கு வந்து தங்கினார் என விசாரித்து வருகிறார்கள்.