Skip to content
Home » மின்னல் தாக்கி வடமாநில தொழிலாளி பலி….

மின்னல் தாக்கி வடமாநில தொழிலாளி பலி….

  • by Senthil

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அவ்வப்போது பலத்த இடி, மின்னலுடன் கனமழையும் பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் லேசான நிலச்சரிவுகள் மற்றும் பாறைகள் உருண்டு விழும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. குன்னூர் அடுத்த கோத்தகிரி அருகே உள்ள செம்மனாரை கிராமப்பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. அக்கிராமத்தில், பழங்குடியினருக்கான குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்று வரும் நிலையில், அதில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மழையின் போது, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த புரோசெஞ்சிட் ராய் (20), வெட்டவெளியில் நின்றிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் மீது, திடீரென மின்னல் விழுந்ததில் அவர் அங்கேயே சுருண்டு விழுந்தார். இதனைக்கண்ட அவருடன் பணியாற்றியவர்கள், அவரை மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  இது குறித்த தகவல் அறிந்த போலீஸார், ராயின் உடலை பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்டுமான பணிக்காக வந்த வடமாநில தொழிலாளி, மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம், சக தொழிலாளர்கள் மற்றும் பழங்குடியின மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!