சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் சரித்திர பதிவேடு குற்றவாளியான பலி ஆடு (எ) அஜய் (20) என்ற இளைஞர் நேற்று மர்மநபர்களால் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் வடசென்னை பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வண்ணாரப்பேட்டை காவல்துறையினர், அஜய்யின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதோடு, தப்பியோடிய குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
வண்ணாரப்பேட்டை பகுதியில் நேற்று அஜய் சென்றுகொண்டிருந்த போது, அங்கு ஆயுதங்களுடன் மறைந்திருந்த மர்மநபர்கள் திடீரென அவரைச் சூழ்ந்து கொண்டு சரமாரியாக வெட்டத் தொடங்கினர். தப்பியோட முயன்ற அஜய்யை விடாமல் துரத்திச் சென்று வெட்டிய கும்பல், அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்ததை உறுதி செய்த பின் அங்கிருந்து தப்பியோடியது. இச்சம்பவம் குறித்து உள்ளூர் மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
