சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் படி கரூர், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 17-ஆம் தேதி மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அறநிலையத்துறை இணை ஆணையர் ரமணிகாந்தன்

தலைமையிலான அதிகாரிகள் கோயில் நிலத்தில் உள்ள கண்ணம்மாள் என்பவரின் வீடு, 62 கடைகள், ஒரு செல்போன் டவர் ஆகியவற்றை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றிட திட்டமிட்டு இருந்தனர்.
இன்று கண்ணம்மாள் என்பவர் வீட்டிற்கு சீல் வைக்க சென்ற இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களை அழைத்துச் சென்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

