செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே முன்னால் சென்ற லாரி மீது ஆம்னி பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். மேலும் 18க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசூர் என்ற இடத்தில் இன்று அதிகாலை 5:30 மணியளவில் கரூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து அதன் முன்னால் சென்ற லாரி மீது மோதியதில் ஆமினி பேருந்து சாலை தடுப்பு சுவரில் கவிழ்ந்தது.
இதில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த 36 பேரில் 18க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவத்தில் கரூர் பகுதியை சேர்ந்த செல்லமுத்து என்பவர் பேருந்து கவிழ்ந்த அதிர்ச்சியில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மேலும் காயமடைந்த 18 பேரை அச்சரப்பாக்கம் போலீசார் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
இதனால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டது. விபத்து குறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
