சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மீன்பிடித் திருவிழாவில் கலந்து கொண்ட பாலசுப்பிரமணியன் என்பவர் உயிரிழந்துள்ளார். சிங்கம்புணரி அருகே மீன்பிடித் திருவிழா ஒரு பிரபலமான நிகழ்வாகும். இது விவசாயம் செழிக்க நடத்தப்படுகிறது. இதில், மக்கள் கண்மாயில் இறங்கி மீன் பிடிப்பார்கள். இது ஒரு பாரம்பரிய திருவிழா, இதில் ஊர்மக்கள் அனைவரும் பங்கேற்பார்கள். இந்த திருவிழா அப்பகுதி மக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வாகும்.
இந்நிலையில், இன்று சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மட்டிக்கரைப்பட்டியில் மீன்பிடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த மீன்பிடித் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றிருந்தனர். அதில் சிங்கம்புணரி அருகே சேந்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த சமையல் கலைஞர் பாலசுப்பிரமணியன் என்பவர் தனது இளைய மகளுடன் மீன்பிடித் திருவிழாவில் பங்கேற்றார். அப்போது கண்மாயில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பாலசுப்பிரமணியன் திடீரென சுயநினைவின்றி கீழே விழுந்தார். இதையடுத்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.