ஊட்டி மலர் கண்காட்சியை தொடங்கி வைக்க 5 நாட்கள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஊட்டி சென்றார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் காலை 11 மணிக்கு கோவை வந்த முதல்வருக்கு விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை நீலகிரி எம்.பி ஆ.ராசா, பொள்ளாச்சி எம். பி.ஈஸ்வரமூர்த்தி, அமைச்சர்கள் கயல்விழி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் முதல்வர் கார் மூலம் ஊட்டி புறப்பட்டு சென்றார்.
ஊட்டியில் இந்த ஆண்டு கோடை விழா கடந்த 3 ம் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து கூடலூரில் வாசனை திரவியங்கள் கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெற்றது. ஊட்டி ரோஜா பூங்காவில் நடைபெற்று வரும் ரோஜா கண்காட்சி இன்று நிறைவடைகிறது.
இதை அடுத்து சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஊட்டி மலர் கண்காட்சி வருகிற 15 ம் தேதி தொடங்கி 11 நாட்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில் மலர் கண்காட்சியை தொடங்கி வைக்க முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் ஐந்து நாட்கள் சுற்றுப் பயணமாக ஊட்டிக்கு சென்றார்.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஊட்டியில் உள்ள தமிழக மாளிகையில் ஓய்வு எடுக்கிறார். பின்னர் பொதுமக்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். மேலும் பழங்குடியினர் மக்களை சந்தித்து பேச உள்ளார். வருகிற 15-ம் தேதி அரசு தாவரவியல் பூங்காவில் 127 வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்து. மலர் அலங்காரங்களை பார்வையிடுகிறார். இதை அடுத்து 16 ம் தேதி சென்னை திரும்புகிறார்.