Skip to content
Home » தமிழ்நாட்டில் அறுவை சிகிச்சை பிரசவங்கள் அதிகரிப்பு ஏன்….. ஐஐடி ஆய்வில் புதிய தகவல்

தமிழ்நாட்டில் அறுவை சிகிச்சை பிரசவங்கள் அதிகரிப்பு ஏன்….. ஐஐடி ஆய்வில் புதிய தகவல்

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி) ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், 2016-2021 ஆண்டுகளுக்கு இடையே நாடு முழுவதும் நடைபெற்ற அறுவை சிகிச்சை முறையிலான பிரசவங்களின் (சி- செக்சன்) எண்ணிக்கை திடீரென கடுமையாக உயர்ந்திருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

தமிழ்நாடு, சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் விரிவான பகுப்பாய்வு நடத்தப்பட்டது. சட்டீஸ்கரைப் பொறுத்தவரை கர்ப்பகால சிக்கல்கள், அதிக ஆபத்துள்ள கருவுறுதல் ஆகியவை அதிகமாகக் காணப்பட்டன. தமிழ்நாட்டில் அறுவை சிகிச்சை முறையிலான பிரசவங்கள் அதிகளவில் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

2021 வரையிலான ஐந்தாண்டுகளில் இந்தியா முழுவதும் அறுவை சிகிச்சை மகப்பேறுகள் பரவலாகி 17.2 சதவீதத்தில் இருந்து 21.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. தனியார் துறையைப் பொருத்தவரை இந்த எண்ணிக்கை 43.1 சதவீதமாகவும் (2016), 49.7 சதவீதமாகவும் (2021) உயர்ந்துள்ளது. அதாவது தனியார் மருத்துவமனைகளில் ஏறத்தாழ பாதிக்கு பாதி பிரசவங்கள் அறுவை சிகிச்சை மூலம்தான் நடைபெறுகின்றன.

குறைந்த எடையுள்ள பெண்களை விட அதிக எடை கொண்ட பெண்களுக்கு இருமடங்கு அதிகமாக அறுவை சிகிச்சை மகப்பேறுகள் நடக்கின்றன. அதேபோன்று 15-24 வயதுடைய பெண்களுடன் ஒப்பிடுகையில் 35-49 வயதுடைய பெண்கள் இரு மடங்கு அதிகமாக தங்கள் பிரசவங்களை அறுவை சிகிச்சை முறையில் நடைபெறவே விரும்புகின்றனர். அதிக எடைகொண்ட பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் விகிதம் 3 சதவீதத்தில் இருந்து 18.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் 35-49 வயதுக்கு இடைப்பட்ட வயதுடையவர்கள் குழந்தை பெறுவது 11.1 சதவீதத்தில் இருந்து 10.9 சதவீதமாக குறைந்திருப்பதையும் ஆய்வு கண்டறிந்துள்ளது.

மொத்தத்தில், இந்தியாவில் 2016-2021 ஆண்டுகளுக்கிடையே ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் தனியார் மருத்துவமனைகளில் நடைபெற்ற மகப்பேறுகளில் நான்கு மடங்கு அளவுக்கு அறுவை சிகிச்சை மூலம் நடைபெற்றுள்ளது. சட்டீஸ்கரில் அறுவை சிகிச்சை பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனைகளை நாடும் பெண்கள் எண்ணிக்கை 10 மடங்கும், தமிழ்நாட்டில் 3 மடங்கும் அதிகரித்துள்ளது.

அரசுப் பொது மருத்துவமனைகளில் போதிய உள்கட்டமைப்பு வசதியின்மை காரணமாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். சட்டீஸ்கரில் அனுமதிக்கப்பட்ட மகப்பேறு மருத்துவர்கள் பணியிடங்களைப் பொருத்தவரை 2021-ம் ஆண்டில் 77 சதவீதம் அளவுக்கு நிரப்பப்படாமல் காலியாக இருந்துள்ளன.

மகப்பேறு அறுவை சிகிச்சைகள் 10 முதல் 15 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைத்துள்ளது.

. தமிழ்நாட்டில் ஏழைப் பெண்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு அறுவை சிகிச்சை மகப்பேறுக்காக செல்லும் சதவீதம் உயர்ந்து ஆபத்தான அளவை எட்டியுள்ளது. இதுபோன்ற அறுவை சிகிச்சை பிரசவங்கள் மருத்துவ ரீதியாக அவசியமின்றி இருப்பின், அதனை மேலும் பகுப்பாய்வு செய்து முறையான சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!