தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் வாரா வாரம் வெள்ளிக் கிழமை நடந்து வருகிறது. நேற்று நடந்த பருத்தி மறை முக ஏலத்தில் பருத்திக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தினர். பாபநாசம் – சாலிய மங்களம் சாலையில் நேற்று மாலை முக்கால் மணி நேரம் சாலை மறியல் நடந்தது. இதனால் சாலையில் லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் இரு புறமும் அணி வகுத்து நின்றன. மாலை பள்ளி முடிந்து சைக்கிளில் வந்த மாணவர்கள், பைக்கில் வந்த ஆசிரியர்கள் உட்பட பலரும் சிரமத்திற்கு ஆளாகினர். சாலை மறியலில் ஈடுப் பட்ட விவசாயிகள் கூறும் போது இந்த வருடம் பருத்தி குவிண்டாலுக்கு ஆயிரம் மட்டுமே இலாபமாக கிடைக்கிறது. இதனால் நஷ்டம் தான். கொட்டையூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்தி எழுபதிலிருந்து எழுபத்தாறுக்கு போகும் போது இங்கு மட்டும் அறுபதிலிருந்து, அறுபத்தி மூணுக்கு போகிறது.
பருத்தி 11 கிலோ எடுக்க கூலியாக ரூ 350 தருகிறோம். கொட்டையூருக்கு வரும் அதே வணிகர்கள் தான் இங்கும் வருகின்றனர். வெளியில் 63 க்கு போகும் போது இங்கு 62 க்கு போகிறது. பாபநாசம் கண் காணிப்பாளர் எங்களை கூப்பிடுவதே இல்லை. தண்ணீர் கூட எங்களுக்கு கிடையாது. வெளி மாநில வணிகர்களை ஏலத்தில் அனுமதிக்க வேண்டும் என்றனர். தஞ்சாவூர் விற்பனைக் குழு செயலர் சரசு, பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, ஆர்.ஐ வரதராஜன், பாபநாசம் காவல் ஆய்வாளர் கலை வாணி, கீழக் கொட்டையூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண் காணிப்பாளர் பிரிய மாலினி உட்பட விவசாயிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப் பட்டு சாலை மறியலை கை விடச் செய்தனர். பட விளக்கம்: பருத்திக்கு உரிய விலை கிடைக்காததால், விவசாயிகள் பாபநாசம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் முன்பு சாலை மறியலில் ஈடுப் பட்டனர்.