பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் பேரூராட்சி பகுதியில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இவ்வூரில் கடந்த காலங்களில் 2 அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வந்தன. நீதிமன்ற உத்தரவின் படி இந்த இரண்டு கடைகளும் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி வேறு ஊருக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் அரும்பாவூரில் சந்து கடைகளில் டாஸ்மாக் சரக்குகளை வாங்கி வந்து சட்ட விரோதமாக ஒரு சிலர் விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் சரக்கு விற்பவர்களுக்கு இடையே ஏற்பட்ட போட்டி காரணமாக அரும்பாவூரில் 15 க்கும் மேற்பட்ட இடங்களில் பெட்டிக்கடைகளில் எல்லாம் டாஸ்மாக் சரக்குகள் கூவி கூவி விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் டாஸ்மாக் சரக்கு விற்பது தொடர்பாக அடிக்கடி சட்டவிரோத சரக்கு விற்கும் கும்பல்களுக்கு இடையே மோதல்களும் பொது இடங்களில் அரங்கேறி வருகிறது. இவ்வாறு பல வழிகளில் சட்டவிரோதமாக சந்து கடைகளில் டாஸ்மார்க் சரக்கு விற்பவர்களால் தினம் தினம் பொதுமக்கள் சங்கடங்களை சந்தித்து வந்தனர் .
இதனால் வெகுண்டு எழுந்த அரும்பாவூர் பகுதி பொதுமக்கள் ஒன்று சேர்ந்து நேற்று காலை அரும்பாவூர் பாலக்கரை பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர், சந்து கடைகளில் சரக்கு விற்பதை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும், மேலும் அரும்பாவூர்
பகுதியில் அமோகமாக டாஸ்மாக் மது பாட்டில்களை விற்பனை செய்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர. ,இது குறித்து தகவலறிந்த தாசில்தார் துரைராஜ், பெரம்பலூர் டிஎஸ்பி பழனிவேல் மற்றும் அரும்பாவூர் போலீசார் விரைந்து வந்து சாலை மறியல் செய்த பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இனிமேல் பொதுமக்கள் கூடும் இடங்களில் சட்டவிரோதமாக டாஸ்மாக் சரக்கு விற்பனை செய்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர், இந்த திடீர் சாலை மறியல் காரணமாக அரும்பாவூர்- பெரம்பலூர் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.