தமிழகம் முழுவதும் வருகிற ஜூன் 28 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் உட்பட மொத்தம் 43,051 மையங்களில், 0-5 வயதிற்குட்பட்ட சுமார் 52.91 லட்சம் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே வழக்கமான தடுப்பூசி அட்டவணைப்படி சொட்டு மருந்து பெற்றிருந்தாலும், முகாம் நாளில் மீண்டும் இதனை வழங்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த முகாம்கள் காலை 7:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்படும். பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் சுங்கச்சாவடிகளில் தற்காலிக மையங்கள் (Transit Booths) அமைக்கப்பட்டு ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளிலும் சொட்டு மருந்து வழங்கப்படும். மலைவாழ் மக்கள் மற்றும் தொலைதூரப் பகுதி குழந்தைகளுக்காக நடமாடும் மருத்துவக் குழுக்களும், பிறமாநிலத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இப்பணியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடவுள்ளனர்.
