வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்தது.
மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்காக இந்தத் தண்டனை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதன் காரணமாக பொன்முடி தனது அமைச்சர் பதவியை இழந்தார். சட்டப்பேரவை உறுப்பினர் தகுதியையும் அவர் இழக்க நேர்ந்தது.
பொன்முடி போட்டியிட்டு வென்ற திருக்கோவிலூர் தொகுதி காலி என கடந்த 5-ம் தேதி சட்டப்பேரவைச் செயலர் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அளித்தார். இதையடுத்து திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் விரைவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கிடையில், சிறையில் சரணடைவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி இருவரும் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சரணடைவதற்கு இருவருக்கும் விலக்கு அளித்தது. மேலும், அவர்களின் மேல்முறையீட்டு மனுவும் விசாரணைக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், இருவரின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ் ஓஹா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பொன்முடி மற்றும் அவரின் மனைவி விசாலாட்சிக்கு எதிரான சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பில், பொன்முடிக்கு தீர்ப்பையும், அவரின் மனைவிக்கு தண்டனையையும் நீதிபதிகள் நிறுத்திவைத்தனர். அதுமட்டுமல்லாமல், சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரலாம் என்றும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. பொன்முடிக்கு எதிரான தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அவர் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராவதற்கான சட்ட ரீதியான தடை நீங்கியிருக்கிறது.
அதேபோல, தகுதி நீக்கம் செய்யப்பட்ட பொன்முடியும் மீண்டும் எம்.எல்.ஏ ஆக முடியுமா, திருக்கோவிலூர் தொகுதி காலியாக உள்ளது என்ற சட்டப்பேரவைச் செயலரின் அறிவிப்பு என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து கேட்டபோது, 3 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால், எம்.எல்.ஏ பதவியை கோரி சட்டப்பேரவை செயலகத்தை பொன்முடி நாடலாம் என்று சட்டப்பேரவை செயலகம் விளக்கம் அளித்துள்ளது.
“தனது எம்.எல்.ஏ பதவியை மீட்க தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகத்தை பொன்முடி அணுகலாம் அல்லது நீதிமன்றத்தை நாடியும் எம்.எல்.ஏ பதவியை பொன்முடி மீட்கலாம். ஊழல் தடுப்பு வழக்கில் இது போன்ற ஒரு நிலை முதல் முறையாக ஏற்பட்டுள்ளது,” என்று சட்டப்பேரவை செயலாளர் செய்தியாளர்களிடம் கூறினார்