அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சரின் வீட்டில் சோதனை நடத்திக்கொண்டிருந்த அதிகாரிகள் மதியம் 2.30 மணி அளவில் வெளியே வந்து கார்களில் இருந்து 3 பெரிய பைகளை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றனர்.
இதைப்பார்த்து அங்கு திரண்டிருந்த திமுகவினர் மற்றும் பொதுமக்கள் பைகளில் என்ன இருக்கிறது என காட்டுங்கள் என்றனர். அதை கண்டுகொள்ளாத அதிகாரிகள், துப்பாக்கி போலீஸ் பாதுகாப்புடன் அவற்றை உள்ளே கொண்டு சென்றனர். இது குறித்து அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் கூறியதாவது:
அமலாக்கத்துறை என்பது மோடி, அமித்ஷா சொல்படி கேட்டு நடக்கும் ஒரு துறையாக உள்ளது. அது பாஜகவுக்கு எதிரானவர்கள் வீடுகளில் மட்டுமே சோதனை நடத்தி வருகிறது. இந்த பைகளில் முக்கிய ஆவணங்களை கொண்டு சென்று அவற்றை பொன்முடி வீட்டில் கைப்பற்றியதாக கூறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் மத்திய அரசின் துறைகள் எல்லாம் இப்போது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டது என்றனர்.