Skip to content

அரியலூர் டால்மியா சிமெண்ட் ஆலை முன் பொதுமக்கள் திடீர் முற்றுகை

அரியலூர் மாவட்டம் ஓட்டக் கோவில் கிராமத்தில் அமைந்துள்ள டால்மியா சிமெண்ட் ஆலையின்  எதிரில் பழமை வாய்ந்த ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் இப்பகுதிகளை சுற்றியுள்ள ஓட்டக்கோவில், தாமரைக்குளம் மற்றும் வெங்கடரமணபுரம் ஆகிய சுற்று வட்டார பகுதி பொதுமக்களின் குலதெய்வமாகும்.

வரும்  ஆவணி மாதம்  இந்த கோவிலுக்க கும்பாபிஷேகம் செய்ய பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர். இக்கோயிலினை சுற்றி டால்மியா சிமெண்ட் ஆலைக்கு வரும் லாரி டிரைவர்கள் இயற்கை உபாதை கழிப்பதால், கோவிலில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இக்கோயிலை சுற்றி சுமார் 300-மீட்டர் சுற்றளவிற்கு டால்மியா சிமெண்ட் ஆலையின் சார்பில் சுற்றுச்சுவர் அமைக்க கடந்த சில மாதங்களாக சிமெண்ட் ஆலை நிர்வாகத்தினை இப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் டால்மியா சிமெண்ட் ஆலை நிர்வாகம்  இக்கோயிலுக்கு எவ்வித பராமரிப்பு பணிகளும் செய்து தராமல், தங்களது நிலங்களை வாங்கிக் கொண்டு, தங்களது கிராமப்புற பகுதி வளர்ச்சிக்கு எவ்விதமாத உதவிகளும் செய்யாமல் இருந்து வருகின்றனர் என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

எனவே டால்மியா சிமெண்ட் ஆலை நிர்வாகத்தினை  கண்டித்து, சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் தாமரைக் குளம்
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பிரேம் குமார்,
சண்முகம், ஓட்டக்கோவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செங்கமலம்,
ஆகியோர் தலைமையில் சிமெண்டாலை முன் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சிமெண்ட் ஆலை நிர்வாகத்தினர் முக்கிய பொறுப்பாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தீர்வு ஏற்பட்டதால் கூடி இருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்

error: Content is protected !!