Skip to content

அரியலூரில் சூடம் ஏற்றி புதிய மினி பஸ்சை வரவேற்ற பொதுமக்கள்..நெகிழ்ச்சி

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்திற்குட்பட்டது பாளையக்குடி ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்டது வாளரக்குறிச்சி கிராமம். இங்குள்ள ஆதிதிராவிடர் தெருவுக்கு இதுநாள் வரை நேரடி போக்குவரத்து சேவை என்பதே கிடையாது. குறுகலான தெருக்களும், சாலை வசதியும் இல்லாததால் போக்குவரத்து வசதி இல்லாத சூழல் இருந்தது.இதனால் இப்பகுதி மக்கள் 2 கிமீ நடந்தோ (அ) இருசக்கர வாகனத்தில் பயணித்தோ அருகிலுள்ள பாளையக்குடி சென்றே பேருந்தில் பயணிக்கும் நிலை இருந்து வந்தது.

இந்நிலையில் இன்று அரியலூரில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் 31 நீட்டிக்கப்பட்ட புதிய மற்றும் பழைய வழித்தடங்களில் மினி பேருந்து சேவையை தொடங்கி வைத்தார். அதிலொன்றாக அரியலூர் முதல் வாளரக்குறிச்சி வரையிலான மினி பேருந்து சேவையும். இன்று மதியம் அரியலூரிலிருந்து வாளரக்குறிச்சி ஆதி திராவிடர் தெருவுக்கு முதன்முதலாக வந்த, மினி பேருந்தை அப்பகுதி பொதுமக்கள் கற்பூரம் ஏற்றி வரவேற்று மகிழ்ந்தனர். பின்னர் தங்களது நெடுநாள் கோரிக்கை நிறைவேறிய நெகிழ்ச்சி தருணத்தில் மினி பேருந்தில் ஏறி அமர்ந்து பயணித்து மகிழ்ந்தனர். அப்போது பெண் ஒருவர் தங்கள் பகுதிக்கு முதல்முதலாக பேருந்து வசதி கிடைத்ததை எண்ணி பேருந்து முன்பு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கியது காண்போரை நெகிழச் செய்தது.

error: Content is protected !!