Skip to content
Home » புத்தாண்டு ராசிபலன் (01.01.2023)

புத்தாண்டு ராசிபலன் (01.01.2023)

  • by Senthil

2023ஆம் ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியையும் உடல் ஆரோக்கியத்தையும் தர www.etamilnews.com சார்பாக வாழ்த்துகிறோம். இன்றைய சூழ்நிலையில் குடும்ப வாழ்க்கையில் மன நிம்மதி இருந்தாலே போதும் அனைத்து மகிழ்ச்சியும் தானாக தேடி வரும். நல்ல உணவு.. உடை..ஆரோக்கியமான வாழ்க்கை, நிம்மதியான உறக்கம் வேண்டும் என்று பலரும் இன்றைக்கு ஏங்கி தவிக்கின்றனர். 2023ஆம் ஆண்டில் யாருக்கெல்லாம் வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.. நிதி நெருக்கடிகள் நீங்கும் நல்ல வேலை கிடைக்கும் என்று பார்க்கலாம். புது வருடத்தில் யாருடைய வாழ்க்கையில் நன்மையையும் பொருளாதார உயர்வையும் தரப்போகிறது என்று பார்க்கலாம். சிலருக்கு சில சங்கடங்கள் நேரலாம். பாதிப்புகள் குறைய பரிகாரங்களும் கூறப்பட்டுள்ளது.

மேஷம்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே..இந்த ஆண்டு உங்களுக்கு அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது. உங்கள் ராசியில் தான் புத்தாண்டு பிறக்கிறது. கல்யாண யோகம் கைகூடி வரப்போகிறது. உங்களின் வாழ்க்கை துணையை இந்த ஆண்டு கண்டுபிடிக்கப்போகிறீர்கள். திடீர் பண வரவு வரும். நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். திடீர் பண வரவு வந்து திக்கு முக்காட வைக்கப்போகிறது.

பரிகாரம்: இந்த ஆண்டு மலைமேல் உள்ள முருகனை படியேறி தரிசனம் செய்யுங்கள் வெற்றிகள் தேடி வரும்.

ரிஷபம்

சுக்கிர பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே.. உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 9ஆம் வீடான பாக்ய ஸ்தானத்தில் வலிமையாக பயணம் செய்யும் போது புத்தாண்டு பிறக்கிறது. குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். திருமண வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கப்போகும் அற்புதமான ஆண்டாக 2023ஆம் ஆண்டு அமைந்துள்ளது. வேலை தொழிலில் கவனமும் விழிப்புணர்வும் அவசியம். நல்ல வேலை கிடைக்கும் வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

பரிகாரம் : வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்

மிதுனம்

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே.. உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் 2022ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வரப்போகிறது. உங்களை இதுநாள்வரை பாடாய் படுத்திய சனி பகவான் இனி சந்தோஷத்தை தரப்போகிறார். பிரிந்தவர்கள் ஒன்றாக இணையும் காலம் கைகூடி வரப்போகிறது. திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணை கைகூடி வரப்போகிறது. கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கப்போகிறது.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்

கடகம்

சந்திரபகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே..இந்த ஆண்டு நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். அஷ்டமத்து சனி சில நேரங்களில் கஷ்டங்களை ஏற்படுத்துவார். வாகன பயணங்களில் நிதானம் தேவைப்படும். குருபகவான் தடைகளைத் தாண்டி வெற்றி பெற வைப்பார். அலுவலகத்தில் செய்யும் செயல்களில் நிதானமும் கவனமும் தேவைப்படும்.

பரிகாரம்: சனிக்கிழமை சனி ஹோரையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்க நன்மைகள் நடைபெறும்.

சிம்மம்

சூரிய பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே..இந்த ஆண்டு உங்களின் பொருளாதார வரவு அற்புதமாக இருக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். குருவின் பார்வையால் காதல் மலரும் கல்யாண வாழ்க்கையில் அடிஎடுத்து வைக்கப்போகிறீர்கள். புத்திரபாக்கியம் கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும் கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கப்போகிறது. கண்டச்சனி காலம் நோய்கள் எட்டிப்பார்க்கும் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.

பரிகாரம்: தினசரியும் சூரிய நமஸ்காரம் செய்ய நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் நலமடையும்

கன்னி

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே..இந்த ஆண்டு குரு பலனுடன் பெண்களுக்கு மனம் போல மாங்கல்யம் கைகூடி வரப்போகிறது. குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்புகள் முடிவுக்கு வரப்போகிறது. காதல் மண வாழ்க்கை அற்புதமாக அமையப்போகிறது. கடன் பிரச்சினை நீங்கும் நல்ல வேலை கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும்.

பரிகாரம் : கடன் பிரச்சினை நீங்க இந்த ஆண்டு செவ்வாய்கிழமை விரதம் இருந்து லட்சுமி நரசிம்மரை வழிபடலாம்.

துலாம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே..2022ஆம் ஆண்டுடன் அர்த்தாஷ்டம சனி முடியப்போகிறது. குருபலன் வந்து விட்டதால் கல்யாண யோகமும் கைகூடி வரப்போகிறது. மனதிற்குப் பிடித்த வரனும் வாசல் தேடி வரும் என்பதால் பிறக்கப்போகும் புத்தாண்டை மகிழ்ச்சியோடு வரவேற்க தயாராகுங்கள். நல்ல வேலை கிடைக்கும் பொருளாதார நிலை உயரும்.

பரிகாரம்: காரியங்களில் வெற்றி கிடைக்க வெள்ளிக்கிழமைகளில் முருகப்பெருமானுக்கு விளக்கேற்றி வழிபடலாம்.

விருச்சிகம்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே..2023ஆம் புத்தாண்டில் உங்களின் மனதில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்திருக்கும். பெண்களுக்கு மனம் போல மாங்கல்யம் கிடைக்கும். இனி உங்களுக்கு வசந்த காலம் வரப்போகிறது. அர்த்தாஷ்டம சனி காலம் என்பதால் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். பண வரவு வந்தாலும் விரைய செலவுகள் வந்து போகும்.

பரிகாரம்: மன மகிழ்ச்சி அதிகரிக்க திங்கட்கிழமைகளில் சிவ ஆலயம் சென்று விளக்கேற்றி வழிபடுங்கள்.

தனுசு

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே…உங்களுக்கு இந்த ஆண்டு முதல் ஏழரை சனி முடியப்போகிறது. கூடவே குருவின் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைக்கப்போகிறது. குரு பலன் வரப்போவதால் கெட்டி மேளம் கொட்டப்போகிறது. வேலை இல்லாமல் தவிப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். எப்போது கடனாக கொடுத்த பணம் வீடு தேடி வரும். பிறக்கப்போகும் புத்தாண்டினை உற்சாகமாக வரவேற்க தயாராகுங்கள்.

பரிகாரம்: வியாழக்கிழமை குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி நெய் விளக்கேற்றி வழிபடுங்கள்.

மகரம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே..2023ஆம் ஆண்டு நிகழப்போகும் சனிபகவானின் இடப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரப்போகிறது. தடைபட்டு வந்த திருமணம் 2023ஆம் ஆண்டு தடைகளைத் தாண்டி நடைபெறப்போகிறது. குடும்பத்தில் இரந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். பாத சனி காலம் என்பதால் கால்களில் கவனம் தேவை.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனிபகவானை எள் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

கும்பம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே..ஜென்ம சனி காலம் என்றாலும் தடைகளைத் தாண்டி ஜெயித்து காட்டுவீர்கள். இந்த ஆண்டு குருவின் பார்வையால் சிங்கிளாக இருந்தவர்கள் குடும்ப வாழ்க்கையில் மிங்கிளாகப் போகிறீர்கள். இந்த ஆண்டு நல்ல வேலை கிடைக்கப்போகிறது. தொழில் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு கடன் பிரச்சினையில் சிக்கித்தவித்தவர்களுக்கு நல்ல நேரம் பிறந்து விட்டது.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

மீனம்

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே.. எத்தனையோ முறையே வரன் பார்த்தும் அமையவில்லையே என்று தவித்தவர்களுக்கு இந்த ஆண்டு கல்யாண யோகம் கைகூடி வரப்போகிறது. நல்ல வேலை கிடைக்கப்போகிறது. வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கப்போகிறது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பண விசயங்களில் விழிப்புணர்வு அவசியம்.

பரிகாரம்: வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!