ராஜஸ்தானில் கடந்த நவம்பர் மாதம் 25ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்தது. ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் உள்ள கரண்பூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட இருந்த காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் காலமானதை தொடர்ந்து அத்தொகுதி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து மீதமுள்ள 199 தொகுதிகளில் கடந்த நவம்பர் 25ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக கட்சி 115 இடங்களில் வென்று அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது.
இதைத் தொடர்ந்து கரண்பூர் சட்டப்பேரவை தொகுதிக்கான தேர்தல் ஜன.5ல் நடந்தது. ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையிலான அமைச்சரவையில் கடந்த மாதம் 30ம் தேதி இணை அமைச்சராக பதவியேற்ற சுரேந்தர் பால் சிங் பாஜ வேட்பாளராக போட்டியிட்டார். காங்கிரஸ் தரப்பில் குர்மீத் சிங்கின் மகன் ரூபிந்தர் சிங் நிறுத்தப்பட்டார். இங்கு 81.38 சதவீத வாக்குகள் பதிவானது. இந்த நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் பாஜக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் சுரேந்திர சிங்கை காங். வேட்பாளர் ரூபிந்தர் சிங் 12,750-வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். அமைச்சர் பதவி ஏற்ற 10 நாளில் சுரேந்திரசிங் தோல்வி அடைந்து விட்டார். அவர் 6 மாதத்திற்குள் எம்.எல்.ஏ. ஆகமுடியாவிட்டால் பதவியை ராஜினாமா செய்ய நேரிடும் நிலை ஏற்பட்டுள்ளது.