தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மேற்கொண்ட வாகன சோதனையில் கோழிப்பண்ணைக்கு கடத்திச் செல்லப்பட்ட 5580 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே புலவன்காட்டில் கூட்டுறவு சங்க சார்பதிவாளர் கவிதா தலைமையிலான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்ற லோடு வண்டியை மறித்து சோதனை செய்தனர்.
அதில்,பட்டுக்கோட்டை அருகே கொண்டிகுளத்தில் உள்ள கோழி பண்ணைக்கு கொண்டு செல்லப்பட்ட 5,580 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, லோடு வண்டி டிரைவரான தஞ்சாவூர் வடக்கு வாசல் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ், 26,, அவருடன் வந்த சதீஷ்குமார், 29, இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், தஞ்சாவூர் கீழவாசல் பகுதியை சேர்ந்த மருதுபாண்டி என்பவர் அரிசியை ஏற்றி அனுப்பியது தெரியவந்தது.
உணவு பாதுகாப்பு துறை அலுவலர் முருகானந்தம் அரிசியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.