உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் ராக்கேஸ் (21), ஜூஹல் (19), பப்லு (31) ஆகிய 3பேரும் மதுக்கரை சாலையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கடந்த சனிக்கிழமை 3 பேரும் சிட்கோ அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பிடித்து 3 பேருக்கு அபராதம் விதித்தனர்.
இதையடுத்து 3பேரும் அங்கிருந்து சென்ற நிலையில், அபராதம் விதித்ததில் கோபமடைந்த 3பேரும் மீண்டும் சனிக்கிழமை இரவு 10 மணியளவில் மீண்டும் கோவை சிட்கோ அருகே உள்ள தண்டவாளத்திற்கு வந்து, அங்கிருந்த மைல்கல், இரும்பு ஆகியவற்றை எடுத்து ரயில்வே தண்டவாளத்தில் வைத்து விட்டு மறைந்து நின்றனர்.
ஆனால் ரயில்வே அருகே உள்ள மற்றொரு தண்டவாளத்தில் ரயில் சென்றது. அப்போது அந்த ரயிலை இயக்கிய லோகோ பைலெட் ரயில்வே தண்டவாளத்தில் கற்கள் மற்றும் இரும்பு இருப்பதை போத்தனூர் ரயில்வே போலீசாருக்கு தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து வந்த தண்டவாள பராமரிப்பு குழுவினர் தண்டவாளத்தில் இருந்த கற்கள், இரும்பு துண்டுகளை அப்புறபடுத்திச் சென்றனர். இதையடுத்து சிறிது நேரத்திலேயே அவ்வழியாக வந்த விரைவு ரயில் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டது.