வேலூர் அடுத்த ரங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் மாதையன் (32) இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு 2010 மாடல் பயன்படுத்திய இரண்டாம் நிலை indica காரை வாங்கியுள்ளார். இந்நிலையில் காரின் முன் பக்க விளக்கு சரியாக தெரியாமல் பழுதாகி உள்ளதால் அதனை சரி செய்ய வேலூரில் உள்ள மெக்கானிக் ஷெட்டுக்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது சத்துவாச்சாரியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருக்கும்போது காரின் முன் பகுதி டேஸ் போர்டில் திடீரென புகை ஏற்பட்டுள்ளது. உடனடியாக காரை விட்டு இறங்கிய மாதையன் முன்பக்கத்தை திறந்து பேட்டரி ஒயரை அகற்றியுள்ளார். இதில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த
வேலூர் தீயணைப்பு துறையினர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ரோந்து பணியினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீ அணைக்கப்பட்டது. இதில் கார் முழுவதுமாக எரிந்து நாசம் ஆனது. தேசிய நெடுஞ்சாலையில் திடீரென கார் தீ பிடித்து எரிந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் சத்துவாச்சாரி பகுதியில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. கார் தீ விபத்து குறித்து சத்துவாச்சாரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2010 மாடல், பயன்படுத்திய காரை இரண்டாம் முறையாக வாங்கி 3 நாட்களில் ஓனருக்கு நிகழ்ந்த சோகம்.