Skip to content
Home » ரவுடி படுகொலை வழக்கில் 7 பேர் கைது செய்து சிறையில் அடைப்பு….

ரவுடி படுகொலை வழக்கில் 7 பேர் கைது செய்து சிறையில் அடைப்பு….

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கலைஞர் காலணி பகுதியைச் சேர்ந்தவர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த லோகநாதன் மகன் அஜித்குமார்(26). மயிலாடுதுறை காவல் நிலைய ரவுடி பட்டியலில் உள்ள இவர் நேற்றுமுன்தினம் இரவு மயிலாடுதுறை திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோயில் தெற்குவீதி பகுதியில் இருசக்கர வாகனத்தில் உறவினர் சரவணனுடன் வாகனத்தில் சென்றபோது மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். உடன் வந்த சரவணன் கையில் வெட்டுக் காயத்துடன் தப்பித்து ஓடி ஒரு வீட்டிற்குள் புகுந்து தப்பினார், பின்பு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அனுப்பி வைக்கப்பட்டார். படுகொலை செய்யப்பட்ட கிடந்தஅஜித்குமார் உடல் கைப்பற்றப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த படுகொலை சம்பவத்தை கண்டித்தும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரி அஜித் குமார் உறவினர்கள் நேற்றுமுன்தினம் இரவிலிருந்து இன்று வரை அஜித்குமார் உடலை பெறாமல் பல்வேறு இடங்களில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடைகளை சேதப்படுத்தியதால் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டது. பழைய பேருந்து நிலையத்துக்குள் பேருந்து வருவது தடை செய்யப்பட்டு மாற்று வழியில் இயக்கப்பட்டது. இதனால் பள்ளி கல்லூரி மாணவ- மாணவிகள் பொதுமக்கள் கடுமையான

போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். மயிலாடுதுறை போலீசார் கொலை சம்பவம் தொடர்பாக கொலை, கொலை முயற்சி, வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆயுத தடுப்பு சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். குற்றவாளிகளை கைது செய்ய நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
கடந்த 2022- ஆம் ஆண்டு மயிலாடுதுறை கொத்தத்தெரு வன்னியர் சங்க முன்னாள் நகர செயலாளர் ரவுடி கண்ணன் கொடூரமாக 20 நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அஜித்குமார் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் நேற்று முன்தினம் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இதற்கு பழிக்குப் பழியாக இந்த கொலை சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

படுகாயமடைந்து சிகிச்சையில் உள்ள சரவணன் அளித்த புகாரின் அடிப்படையில் அஜித்குமார் கொலை சம்பவத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வன்னியர் சங்க நகர செயலாளர் ரவுடி கண்ணனின் சகோதரர் மில்கி (எ) சந்திரமோகன், மணக்குடி சதீஸ், மயிலாடுதுறையை சேர்ந்த பாம் பாலாஜி, சித்தமல்லியை சேர்ந்த ஆவன்னா என்கிற ஶ்ரீராம், திருவிழந்தூரை சேர்ந்த சந்திரமௌலி, வக்காரமாரியை சேர்ந்த மோகன்தாஸ், தருமபுரம் பகுதியை சேர்ந்த சத்தியநாதன் ஆகிய 7 நபர்களை குழந்தைகள் தடுப்பு குற்ற புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையில் தனிப்படை போலீசார் கைது செய்து குத்தாலம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பழிக்கு பழியாக இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது என தெரிய வந்துள்ளது. வன்னியர் சங்க பிரமுகர் ரவுடி கண்ணனை படுகொலை செய்தவர்களை பழிதீர்க்க ஏற்கனவே வெடிகுண்டு வீசி கொலை செய்ய சதிதிட்டம் தீட்டியபோது காவல்துறையினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்ட 15 பேரில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சந்திரமோகன், மணக்குடி சதீஸ், சத்தியநாதன் ஆகியோர் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் குமார் கொலை வழக்கில் மேலும் பலரை கைது செய்ய வேண்டும் என கோரி போராட்டம் தொடர்ந்து வருகிறது. மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் முடிவுக்கு வராததால் மயிலாடுதுறை நகர பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். மயிலாடுதுறை நகர் போராட்டக்காரர்களின் பிடியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றும் இதே நிலை நீடிக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!