நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், இன்று சென்னை பாஜக அலுவலகத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிபட்ட ரூ.4 கோடி பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லைஎன பலமுறை கூறிவிட்டனர். தேர்தல் நேரத்தில் 200 கோடிக்கு மேல் பிடித்திருக்கிறார்கள். ஆனால் 4 கோடிக்கு மட்டும் இப்படி விசாரணை நடக்கிறது. வேல்முருகன் வாக்குமூலத்தில் கூறியதால் அந்த பணம் என்னுடைய பணம் ஆகிவிடுமா? வேல்முருகன் மட்டும் அல்ல, எனக்கு தெரிந்தவர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்கள் சொல்லிவிட்டால் அந்த பணம் என் பணம் ஆகிவிடுமா? எங்கேயோ பிடிபட்ட பணத்துடன் என்னை தொடர்பு படுத்துகிறார்கள். என்னை குறிவைக்கிறார்கள். விசாரணைக்கு ஆஜராகி போலீசாரிடம் இது தொடர்பாக விளக்கம் அளிப்பேன். மே 2ம் தேதி ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். இதனை அரசியல் சூழ்ச்சியாக பார்க்கிறேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.