Skip to content
Home » குடுகுடுப்பைக்காரர் வேஷமிட்டு திமுகவுக்கு பிரச்சாரத்தை தொடங்கிய சேலம் கோவிந்தன்…

குடுகுடுப்பைக்காரர் வேஷமிட்டு திமுகவுக்கு பிரச்சாரத்தை தொடங்கிய சேலம் கோவிந்தன்…

திமுக தலைமைக் கழக பேச்சாளரான சேலம் கோவிந்தன் திமுக மேடைகளில் சிறந்த பேச்சாளராக விளங்கி வருகிறார். பொதுக்கூட்டங்கள் இல்லாத நேரத்தில்  தன்னை குடுகுடுப்பைக்காரர் போல அலங்கரித்துக்கொண்டு ஒவ்வொரு ஊரிலும் சென்று திமுகவுக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், இடைத்தேர்தல் உள்ளிட்டவற்றில் இவ்வாறு அவர் குடுகுடுப்பைக்காரர் வேஷத்தில் திமுக ஆதரவு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

 2024 மக்களவைத்  தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் அதற்காக தங்களை தயார்படுத்திக் கொண்டு வருகின்றன.  தற்போது கூட்டணி,  தொகுதிப் பங்கீடு ஆகியவை குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில்  தேர்தல் பிரச்சாரத்தை யாரும் இன்னும் தொடங்கவில்லை. ஆனாலும் மக்களவைத் தேர்தலில் திமுகவை ஆதரித்து சேலம் கோவிந்தன் தனது பிரச்சாரத்தை தொடங்கி விட்டார்.

முதலில் ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு ஊராகச் சென்று  குடுகுடுப்பை பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு, தற்போது திருப்பூர் மாவட்டத்தில் அவர் பிரச்சாரம் செய்து வருகிறார். தனது பிரச்சாரத்தில் ‘இந்த தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கை காட்டுபவர் தான் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார், மோடி இன்னொருமுறை பிரதமராக  வந்தால் நாடு தாங்காது,  அனைவருக்கும் உரிமைத் தொகை கொடுத்தவர் முதல்வர் ஸ்டாலின்’ என்று குடுகுடுப்பை அடித்தபடி இவர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

கோவிந்தனின் இந்த நூதன முறை பிரச்சாரம் மக்களை ரசிக்க வைப்பது மட்டுமின்றி மக்கள் மத்தியில் வரவேற்பும் பெற்றுள்ளது. குடுகுடுப்பை சத்தம் கேட்டவுடன் தன்னையும் அறியாமல் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள். இதே போல் கடை வீதிகள், பேருந்து நிறுத்தம் , மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தனி நபராக நின்று எந்த விமர்சனத்தையும் காதில் வாங்காமல், கேலி கிண்டல்களைக் கண்டு கொள்ளாமல் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் கோவிந்தன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!