பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்களது கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில், இன்று திடீரென சென்னை தலைமைச் செயலகம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போது, சட்டசபை கூட்டம் வேறு நடந்துவருவதால் போர் நினைவுச் சின்னம் முன்பே போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதையும் தாண்டி எப்படியோ தலைமைச் செயலகம் முன் வந்து முற்றுகை போராட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டனர். உடனே, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தூய்மைப் பணியாளர்களில் சிலர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இதனால், தூய்மைப் பணியாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சட்டசபை கூட்டம் வேறு நடந்து கொண்டிருந்ததால், தலைமைச் செயலகம் முன்பு பரபரப்பாக காணப்பட்டது. அனைவரையும் போலீசார் கைது செய்து வாகனங்களில் அழைத்து சென்று சமுதாயக் கூடத்தில் தங்கவைத்தனர்
