சென்னை: வண்ணாரப்பேட்டையில், போதை மருந்தை ஊசி மூலம் உடலில் செலுத்திக்கொண்ட ஆகாஷ் (24) என்ற வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் போதை மருந்தை ஊசி மூலம் செலுத்திக்கொண்ட அந்த வாலிபருக்கு, அடிக்கடி குடிப்பழக்கம் மற்றும் கஞ்சா பழக்கம் இருந்துள்ளது. இதுமட்டுமின்றி, அவர் போதை மாத்திரைகளைக் கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்திக்கொள்ளும் பழக்கமும் கொண்டவர் என்று வண்ணாரப்பேட்டை போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொடர்ந்து போதை ஊசியை உடலில் செலுத்திக் கொண்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு, அவர் நீண்ட நாட்களாக சென்னை அரசு ஸ்டான்லி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், போதை ஊசி பழக்கத்தால் நரம்புகள் அனைத்தும் தளர்ந்து, உடல்நலக் குறைவு காரணமாக அவர் தற்போது மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
இது குறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த போதை ஊசிகள் வண்ணாரப்பேட்டையில் எங்கு விற்கப்படுகின்றன, யாரெல்லாம் இவற்றை பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதற்கு முன்பு இந்த போதை ஊசிகள் எங்கெல்லாம் விற்கப்பட்டன என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
