பட்டுக்கோட்டை – தஞ்சாவூர் அகல ரயில் பாதை திட்டத்தை உடனடியாக ஒன்றிய, மாநில அரசுகள் செயல்படுத்தவேண்டி பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் பயணிகள் பொது நல சங்கத்தினர் இன்று கையெழுத்து இயக்கம் நடத்தினர்
பட்டுக்கோட்டை – தஞ்சாவூர், மன்னார்குடி – பட்டுக்கோட்டை புதிய ரயில் பாதை திட்டத்தை உடனடியாக ஒன்றிய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் பயணிகள் பொது நல சங்கத்தினர் இன்று கையெழுத்து இயக்கம் நடத்தினர். பட்டுக்கோட்டை – தஞ்சாவூர் மற்றும் மன்னார்குடி – பட்டுக்கோட்டை புதிய ரயில் வழித்தடத்திற்கு நிலம் எடுப்பதற்காக அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அப்போது ரயிலுக்கு வந்து செல்கின்ற அனைத்து ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்களிடம் திட்டங்களை உடனடியாக ஒன்றிய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி கையெழுத்து பெற்றனர். இது குறித்து சங்கத்தினர் கூறுகையில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தயாரிக்கப்பட்ட திட்டமான பட்டுக்கோட்டை – தஞ்சாவூர் புதிய ரயில் பாதை திட்டத்தையும், மன்னார்குடி – பட்டுக்கோட்டை ரயில் பாதை திட்டத்தையும் ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும். தற்போது நிலம் எடுப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. உடனடியாக காலதாமதம் இல்லாமல் நில எடுப்புக்கான நில மதிப்புத் தொகையை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
