Skip to content
Home » சிதம்பரம் தொகுதியில் பாஜக வேட்பாளருக்கு ஜெ. பி.நட்டா வாக்குகள் சேகரிப்பு..

சிதம்பரம் தொகுதியில் பாஜக வேட்பாளருக்கு ஜெ. பி.நட்டா வாக்குகள் சேகரிப்பு..

அரியலூர் மாவட்டம் கொல்லாபுரம் கிராமத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கு, பாஜக தேசியத் தலைவர் ஜெ. பி.நட்டா வாக்குகள் சேகரித்தார்.

கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா  பேசுகையில், பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் தமிழ் பண்பா டு, கலாச்சாரம், அதன் தொன்மை ஆகியவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஆனால் திமுக இந்த தமிழகத்தின் கலாச்சாரத்தை அழித்து வருகின்றது.

பாரத பிரதமர் மோடி மேக் இன் இந்தியா என்ற திட்டத்தின் கீழ்,  இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை, அதிக அளவில் உருவாக்க வேண்டும் என்ற திட்டத்தை கொண்டு வந்தார். அதன் அடிப்படையில் 90 சதவீத மொபைல் போன்கள் தற்பொழுது இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆட்டோமொபைல் உற்பத்தியில், அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் கோலோச்சி வந்த நிலையில், உலக அளவில் இந்தியா ஆட்டோ மொபைல் உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் உள்ளது. சுகாதாரத் துறையில் மருந்து உற்பத்தியில் கொரோனாவில் மிகப் பெரிய பங்கினை இந்தியா உலகிற்கு செய்துள்ளது. மிக குறைந்த விலையில் மருந்துகளை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது. பாரத பிரதமர் மோடி ஏழை மக்களின் முன்னேற்றம், வளர்ச்சி மிகுந்த பெண்கள், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, விவசாயிகளுக்கு உற்பத்தி மற்றும் விலை, பட்டியல் இன மக்களுக்கு வாழ்க்கை மேம்பாடு ஆகிய ஐந்து கொள்கைகளில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இந்தியாவில் 10 கோடி பெண்களுக்கு கேஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் 40 லட்சம் தமிழகத்திற்கும் 2.5 லட்சம் சிதம்பரம் நாடாளுமன்ற பெண்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று ஜல்ஜீவன் திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதில் இந்தியா முழுவதும் 11 கோடியே 40 லட்சம் இணைப்புகளும், தமிழகத்தில் 80 லட்சம் இணைப்புகளும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு 4 லட்சம் குடிநீர் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளது.

குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தில் இந்தியா முழுவதும் 4 கோடி வீடுகள் கான்கிரீட் வீடுகளாக கட்டப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 14 லட்சம் வீடுகளும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் 43 ஆயிரம் வீடுகளும் கான்கிரீட் வீடுகளாக கட்டப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தில், ஐந்து கிலோ அரிசி அல்லது கோதுமை, ஒரு கிலோ பருப்பு ஆகியவை வழங்கப்படும் திட்டத்தில் இந்தியாவின் உள்ள வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 25 கோடி மக்கள் தற்பொழுது வறுமை கோட்டிற்கு மேலே உள்ளனர் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. மக்களுக்கு முறையான மருத்துவம் சென்றடைய வேண்டும் என்று பாரத பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ உதவி பெறலாம் என்ற திட்டத்தில், இதுவரை இந்தியாவில் 55 கோடி மக்கள் பயன்பெற்றுள்ளனர். இது இந்திய மக்கள் தொகையில் 40 சதவீதமாகும். தமிழகத் என்பது மோடிக்கு மிகுந்த பாசத்தையும் அன்பையும் தரக்கூடிய மாநிலமாகும். இந்த தமிழகத்திற்காக சுகாதாரத் துறையில் 1650 கோடியும், கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்திற்கு 630 கோடியும், கிராமப்புற மேம்பாட்டிற்கு 10,840 கோடியும், ஜல்ஜீவன் திட்டத்திற்கு 775 கோடியும், பாரத பிரதமர் தமிழகத்திற்கு வழங்கி உள்ளார். ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஏழு மடங்கு நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை வசதிகள் 1478 கோடிக்கு மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு தளவாட உற்பத்தி கேந்திரமாக தமிழகத்தை உருவாக்கி அதில் சென்னை, திருச்சி, ஓசூர், கோயமுத்தூர், சேலம் ஆகிய ஐந்து இடங்களில் 12,000 கோடியில் தளவாட பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

11 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டிகளாக மாற்றப்படும் திட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க சென்னையும் பெங்களூரும் தொழிற்சாலை காரிடர் நகரங்களாக உருவாக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தமிழகத்தில் மிகப்பெரிய வளர்ச்சித் திட்டங்களை பாரத பிரதமர் மோடி வழங்கி வருகிறார்.

இதே வேளையில் இந்தியாவில் இந்தியா கூட்டணி என்று ஒன்று உருவாகியுள்ளது. இந்த கூட்டணியின் மொத்த கொள்கையே ஊழல்.

பாரதப் பிரதமர் மோடி ஊழலை ஒழிப்பேன் என்று சபதம் இட்டு பணியாற்றி வருகிறார்.

தமிழ்நாட்டில் திமுக என்றால் வாரிசு அரசியல், மணி லாண்டரி, கட்டப்பஞ்சாயத்து என்பது அர்த்தமாகும். இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுமே வாரிசு அரசியலையே முன்னிறுத்தி உள்ளது. இது அந்த கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும். இதுபோன்று இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி உள்ளன.

ஃபருக் அப்துல்லா காமன்வெல்த் கிரிக்கெட் ஊழல், லல்லு பிரசாத் மாட்டுத்தீவன ஊழல், அகிலேஷ் யாதவ் லேப்டாப் ஊழல், கெஜ்ரிவால் மதுபான கொள்கை ஊழல், திமுக கருணாநிதி குடும்பம் வருமான வரி ஊழல் உள்ளிட்ட ஊழலில் சிக்கித் தவிக்கின்றன.

காங்கிரஸ் கட்சியின் சோனியா, ராகுல், சிதம்பரம், கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்ட அனைவருமே தற்பொழுது பெயில் வாங்கி வெளியில் உள்ளனர். இந்தியா கூட்டணி என்பது ஒன்று ஜெயில் அல்லது பெயில் என்ற ஊழல் கட்சியாகவே உள்ளது. எனவே இந்த ஊழலை ஒழிக்க பாரதப் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வர நீங்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

 

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் கார்த்தியாயினி, வேலூர் மேயராக இருந்து 24 மணி நேரம் மக்கள் பணியாற்றியவர். எனவே இவருக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று பாஜக தேசிய தலைவர் ஜெ. பி.நட்டா கேட்டுக் கொண்டார்.

 

கூட்டத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா,

பாஜக வேட்பாளர் கார்த்தியாயனி,  பாஜக  மாவட்ட தலைவர் ஐயப்பன், பாஜக   பெரம்பலூர் மாவட்ட தலைவர் செல்வராஜ், பாமக வன்னியர் சங்கத்தலைவர் வைத்தி,  தமாகா  மாநில செயற்குழு உறுப்பினர் மாசிலாமனி, ஓபிஎஸ் அணி பெரம்பலூர் முன்னாள் எம்எல்ஏ R.T. ராமச்சந்திரன் ,  அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், இந்திய ஜனநாயக கட்சி அரியலூர் மேற்கு மாவட்ட தலைவர் அருள் கணேசன், கிழக்கு மாவட்ட தலைவர் ஜோசப் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!