Skip to content
Home » மனைவியின் தங்கை கணவரை வெட்டி கொன்ற கட்டிட தொழிலாளி..

மனைவியின் தங்கை கணவரை வெட்டி கொன்ற கட்டிட தொழிலாளி..

  • by Senthil
சிவகாசி மேற்கு பகுதி இந்திரா நகரை சேர்ந்த கணேசன் (வயசு 37) பாலிதீன் பை தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி தேவி (வயது 31) பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 3-ம் வகுப்பு பயிலும் ஹரி பாலாஜி( வயது 8) 1-ம் வகுப்பு படிக்கும் நந்தகுமார் (வயது 7) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். கணேசன் தனக்கு திருமணம் முடிந்த நாளிலிருந்து மனைவி தேவி மீது சந்தேகபட்டு, அன்றாடம் குடித்து மது போதையில் அவரை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக கடந்த 4 மாதத்திற்கு முன்பு தேவி தனது கணவர் கணேசனை பிரிந்து, ஈஞ்சார் கிராமத்தில் தனது தாயார் ராமலட்சுமி வீட்டில் தனது மகன்களுடன் தற்போது வசித்து வருகிறார். இதற்கிடையே சிவகாசி காவல் நிலைய வட்டாரங்களில் கணேசன் -தேவி தம்பதியினரின் குடும்பப் பிரச்சனை பற்றி வழக்கு பதிவு செய்து, கணவன் மனைவி இருவருக்குமிடையே சிவகாசி நீதிமன்றத்தில் விவகாரத்து குறித்த வழக்கும் தொடுக்கப்பட்டு நடந்து வருகிறது.

murder

இந்நிலையில் ஈஞ்சார் கிராமத்திற்கு சென்ற கணேசன் தனது மனைவி மற்றும் மாமியாருடன் தகராறு செய்து அவர்களை தாக்கியதாக தெரிகிறது. இப்பிரச்சனையில் கணேசனுக்கும், தேவிக்கும் லேசான காயம் ஏற்பட்டு, கணவன்- மனைவி இருவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக உள் நோயாளிகளாக சேர்க்கப்பட்டனர். சிகிச்சையிலிருந்த கணேசன் மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடி இந்திரா நகரில் உள்ள தனது வீட்டிற்கு சென்ற போது அதே நகரில் அருகே குடியிருக்கும் தேவியின் உடன் பிறந்த சகோதரி முத்துமாரி வீட்டிற்கு சென்றார். அங்கு அவரது கணவர் கட்டட தொழிலாளியான தங்கப்பாண்டி(வயது 41) உள்பட சிலர் பிரச்சனை குறித்து கணேசனிடம் தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட தகராறு  முற்றவே ஆத்திரமடைந்த அவர்கள் கணேசனை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். கொலை குறித்து தகவலறிந்த சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார்கள் சம்பவ இடத்திற்கு சென்று கணேசனின் பிரேதத்தை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இரவோடு இரவாக அனுப்பி வைத்தனர்.

கொலை சம்பவத்தை யடுத்து சிவகாசி நகர் காவல் நிலையத்தில் சரணடைந்த தங்கபாண்டியனை போலீசார்கள் பிடித்து வழக்குப்பதிவு செய்த நிலையில் இக்கொலை எதற்காக நடைபெற்றது? குடும்பத்தில் என்ன பிரச்சனை? கொலை சம்பவத்தில் மேலும் ஈடுபட்டவர்கள் யார்? யார்? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். காவல் நிலையத்தில் சரணடைந்துள்ள கட்டிட தொழிலாளி தங்கபாண்டியனின் மனைவி முத்துமாரி சிவகாசி ஒன்றியம் ஆனையூர் ஊராட்சி மன்றத்தில் துணைத் தலைவராக பொறுப்பில் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!