கோவை மாவட்டம், சூலூர் அருகே திருநங்கைகள் குடியிருக்கும் வீட்டை திடீரென அடியாட்களை வைத்து அடித்து நொறுக்கிய பாஜக பிரமுகரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சூலூர் மயிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மனோன்மணி இவர் பாஜக வின் சூலூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளராக உள்ளார். இவருக்கு சொந்தமான வீடு மயிலம்பட்டி பகுதியில் இருக்கிறது. இந்த வீட்டை ஏஞ்சலினா மற்றும் 2 திருநங்கைகளுக்கு வாடகைக்கு குடியமர்த்தி உள்ளார். கடந்த ஐந்து வருடங்களாக திருநங்கைகள் அங்கு குடியிருந்து வரும் நிலையில் மனோன்மணி அவர்களை காலி செய்யுமாறு கூறியுள்ளார். திருநங்கைகள் தங்கள் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை திருப்பி தந்தால் காலி செய்வதாக கூறியுள்ளனர். தொடர்ந்து கடந்த ஆறு மாதங்களாக இது போன்ற
பிரச்சனைகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில் திருநங்கைகள் பிரச்சனை தொடர்பாக இருபதுக்கு மேற்பட்ட புகார்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் சூலூர் காவல் நிலையத்தில் அளித்துள்ளனர் .இந்நிலையில் நேற்றுஏஞ்சலினா சந்தைக்கு சென்றிருந்த நிலையில் மனோன்மணி நான்கு அடியாட்களுடன் சென்று திருநங்கைகள் குடியிருந்த வீட்டின் மேல் அமைந்திருந்த சிமெண்ட் கூரைகளை பிரித்து துவசம் செய்து விட்டார். வீட்டில் இருந்த பொருட்களை அப்படியே உள்ளயே போட்டு வீட்டை அடித்து நொறுக்கியுள்ளார் .இதனை பார்த்து திருநங்கைகள் தங்களால் ஏதும் செய்ய முடியாத நிலையில் மீண்டும் சூலூர் காவல் நிலையம் வந்து புகார் அளித்தார். புகாரின் பேரில்சம்பவ இடத்திற்குச் சென்ற சூலூர் போலீசார் மனோன்மணியால் அழைத்துச் செல்லப்பட்ட அடியாக்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.