“காரில் இருந்து பறந்த தீப்பொறி… கதவில் அமர்ந்து மாணவிகள் ஆட்டம்!” – கோவை CMS கல்லூரியில் ஓணம் கொண்டாட்ட அட்ராசிட்டி: வீடியோ வைரல்!
ஆபத்தான சாகசத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் பொதுமக்கள் கோரிக்கை!
கோவை, கணபதி பகுதியில் அமைந்துள்ள CMS கல்லூரியில் நடைபெற்ற ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தின் போது, மாணவர்கள் சிலர் கார்களை ஆபத்தான முறையில் ஆல்ட்ரேஷன் செய்து சாகசங்களில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் வெளியாகிப் பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளன.
ஓணம் கொண்டாட்டத்தையொட்டி கல்லூரி வளாகத்திற்குள் கார்களைக் கொண்டு வந்த மாணவர்கள், அவற்றின் சைலன்ஸர்களை (Exhaust) மாற்றி அமைத்து (Alteration), அதில் இருந்து பயங்கர சத்தத்துடன் தீப் பிழம்புகள் வெளியேறுவது போன்று சாகசமாக ஓட்டிச் சென்று உள்ளனர்.
அதே நேரத்தில், கார்களின் கதவுகளின் மீது மாணவிகள் ஆபத்தான முறையில் அமர்ந்து கொண்டு, அதிக ஒலியுடன் ஒலித்த பாடல்களுக்கு ஆட்டம் ஆடியபடி அட்ராசிட்டியில் ஈடுபட்டு உள்ளனர்.
மாணவர்கள் மற்றும் மாணவிகள் கல்லூரி வளாகத்திற்கு உள்ளேயே பிறருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இந்த சாகசங்களில் ஈடுபட்டதை அங்கு இருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்து உள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, பலரின் கண்டனத்திற்கும் உள்ளாகி வருகிறது.
திருவிழா மற்றும் பண்டிகைக் காலங்களில் மாணவர்கள் இதுபோன்ற ஆபத்துக்களை உணராமல் சாகசங்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது.
எனவே, பிற மாணவர்களின் பாதுகாப்பையும் வருங்காலச் சந்ததியினரின் நலனையும் கருத்தில் கொண்டு, இத்தகைய ஆபத்தான செயல்களில் ஈடுபட்ட மாணவர்கள் மீதும், மோட்டார் வாகன விதிகளை மீறி கார்களை மாற்றி அமைத்தவர்கள் மீதும் காவல்துறையும் கல்லூரி நிர்வாகமும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வலியுறுத்தி உள்ளனர்.
