சபாநாயகர் அப்பாவு இன்று சட்டமன்றத்தில் ஒரு அறிக்கை படித்தார். அதில் கூறியிருப்பதாவது: சட்டமன்றத்தில் கடந்த 9ம் தேதி கவர்னர் ரவி உரையாற்றினார். அந்த உரையின்போது காங்கிரஸ், விசிக, மமக, கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் ஆளுநர் அருகே சென்று கோஷம் போட்டது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். அப்போது அசாதாரண சூழலை உருவாக்கியது அவையோ, அரசோ இல்லை. ஆளுநர் பேசும்போது ஒரு சூழல் ஏற்பட்டு விட்டது. அப்போது மதிநுட்பத்துடன் முதல்வர் நடந்து கொண்டதால் இந்த அவையின் மாண்பு மட்டுமல்ல, இந்தியா முழுமையும் உள்ள சட்டமன்றத்தின் மாண்பையும் நமது முதல்வர் ஸ்டாலின் காத்து உள்ளார். இந்தியா முழுவதும் இன்று அதைத்தான் பேசுகிறார்கள்.
குடியரசு தினத்தில் முதல்வர்கள் கொடியேற்றும் உரிமையை எப்படி கலைஞர் பெற்று தந்தாரோ, அதுபோல இந்தியா முழுவதும் உள்ள சட்டமன்றத்தின் நடவடிக்கைக்கு முன்னுதாரணமாக அன்றைய தினம் நமது சட்டமன்றத்தில் முதல்வரின் நடவடிக்கை அமைந்தது .நடந்தது நடந்தவையாக இருக்கட்டும். சட்டமன்றத்தில் பேசுபவர்கள் கவர்னரை பற்றி விமர்சனம் செய்து பேசக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.