நெல்லையில் இருந்து சென்னைக்கு நேற்று காலையில் வழக்கம்போல் வந்தே பாரத் ரயில் புறப்பட்டு சென்றது. கடம்பூர் அருகே தங்கம்மாள்புரம் ரயில்வே கேட் பகுதியில் சென்றபோது, அங்கிருந்த மர்மநபர்கள் திடீரென ரயில் மீது கல்வீசினர். இதில் வந்தே பாரத்தின் சி.1 பெட்டியில் ஜன்னல் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இதனால் அந்த பெட்டியில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து ரயில் என்ஜின் டிரைவர், மதுரை ரயில் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக தூத்துக்குடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, கல்வீசிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
