திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியை சேர்ந்த 17வயது மாணவி ஒருவர் காந்திகிராமத்தில் உள்ள ஒரு கல்லூரியில் விடுதியில் தங்கி நோயாளிகளை பராமரிக்கும் பட்டய படிப்பு படித்து வருகிறார்.
இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் வசிக்கும் அவருடைய அத்தை மீனாட்சியை பார்க்கச் சென்றுள்ளார். அப்போது, மாணவியின் உடலில் மாற்றங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த அவர், மாணவியை அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியின் அத்தை இது குறித்து மாணவியிடம் விசாரணை செய்ததில், சின்னாளப்பட்டியில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் கணக்காளராக வேலை செய்யும் ராம்குமார் என்பவரை காதலிப்பதாகவும், அவருடன் கல்லூரி விடுமுறையின்போது தனிமையில் இருந்ததாகவும், அதனால் தான் கர்ப்பம் ஆனதாகவும் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து மாணவியின் கர்ப்பத்தை கலைக்க முடிவு செய்த அத்தை மீனாட்சி, அவரை திருச்சி உறையூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்துள்ளார். இருப்பினும், அவருக்கு உதிரப்போக்கு நிற்காததால், அவரை மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் சகோதரி அளித்த புகாரின்பேரில் போலீசார், காதலன் ராம்குமார், மாணவியின் அத்தை மீனாட்சி மற்றும் சிறுமிக்கு கருகலைப்பு செய்த மருத்துவர் உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.