நாடு முழுவதும் முதியோர் இல்லங்களை அமைப்பது குறித்து ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் நான்கு வாரங்களில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் மருத்துவ வசதியுடன் கூடிய முதியோர் இல்லங்களை அமைக்க உத்தரவிட கோரி தாக்கல் செய்த பொதுநல மனு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, 2022க்கு பிறகு இந்த வழக்கு ஏன் விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பலமுறை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்றும் முறையிடப்பட்டதாகவும், ஒன்றிய அரசு இதுவரை முழுமையான பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்யவில்லை என்றும் மனுதாரர் தரப்பு தெரிவித்தது. அப்போது, இந்த மனுவை உயர்நீதிமன்றங்கள் தான் விசாரிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், இந்த நீதிமன்றமே வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து, அவற்றை செயல்படுத்த உயர்நீதிமன்றங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று கருத்து தெரிவித்தது. பின்னர், ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் நான்கு வாரங்களில் விரிவான பதில் அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
