Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஒரு பக்கமாக சாய்ந்தபடி சீறிப் பாய்ந்த தமிழக அரசு பஸ்… அதிர்ச்சி

பொள்ளாச்சியில் இருந்து மன்னார்காட் செல்லும் பஸ்சுக்கு என்ன ஆச்சு? ஆபத்தான பயணத்தால் அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள்!

​கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இருந்து ஆனைக்கட்டி வழியாகக் கேரள மாநிலம் மன்னார்காட் செல்லும் தமிழக அரசுப் பேருந்து ஒன்று, ஒரு புறமாக ஆபத்தான முறையில் சாய்ந்தபடியே அதிவேகமாகச் சென்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இருந்து கேரளா மாநிலம் மன்னார்காட்டிற்கு ஆனைக்கட்டி வழியாகத் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து (TNSTC) ஒன்று இயங்கி வருகிறது.
​இந்நிலையில், ஆனைக்கட்டி பாதையில் கோவை நோக்கிச் சென்று கொண்டு இருந்த இந்தப் பேருந்து, சமநிலையை இழந்து இடது அல்லது வலது புறமாக ஆபத்தான முறையில் சாய்ந்தபடியும், சாலையின் ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டும் சென்று உள்ளது. பேருந்தில் பயணிகள் இருந்த நிலையிலும், ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் அதிவேகமாகச் செலுத்தி உள்ளார்.

அந்தச் சமயத்தில், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், இந்த ஆபத்தான பயணத் தனது செல்போனில் வீடியோவாகப் படம்பிடித்து உள்ளார்.
​அவர் தனது வீடியோவில் பேசும்போது ….

“ஆனைக்கட்டியில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் வழியில் தான் இந்தப் பேருந்தைப் பார்த்தேன். பேருந்து மிகவும் அதிவேகமாகச் சென்று கொண்டு இருக்கிறது. ஆனால், பஸ்ஸுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல, ஒரு பக்கமாக முற்றிலும் சாய்ந்து போய்க் கொண்டு இருக்கிறது. இந்த ஆபத்தான நிலையிலும் பஸ் தொடர்ந்து ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. எனக்கு அவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது, எங்குமே வண்டியை நிறுத்தி என்ன பிரச்சனை என்று கூடப் பார்க்கவில்லை” எனப் புலம்பியபடி பதிவிட்டு உள்ளார்.

இந்த நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போலப் பரவி, பொதுமக்கள் இடையே பெரும் பேசுபொருளாக மாறி உள்ளது.

​பேருந்தின் ‘ஏர் ஸ்ப்ரிங்’ பழுது காரணமாகவோ அல்லது ‘சாஃப்ட் ஆக்சில்’ முறிவு காரணமாகவோ பேருந்து இவ்வாறு சாய்ந்து இருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது. பயணிகளின் உயிரோடு விளையாடும் வகையில் பழுதுடைந்த நிலையிலும் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மற்றும் பராமரிப்பைப் புறக்கணித்த போக்குவரத்து அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

error: Content is protected !!