பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் மண்டல அளவில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி கோவையில் டாடாபாத் பகுதியில் டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் (சிஐடியு) சார்பில் மண்டல அளவிலான உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
23 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ESI ஓய்வு வயதை 60 வயதாக உயர்த்த வேண்டும் உள்ளே கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
கோவையில் இது குறித்து பேசிய டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனத்தின் (சிஐடியு) பொதுச்செயலாளர் திருச்செல்வன், டாஸ்மாக் ஊழியர்களின் இந்த கோரிக்கைகளை புதிய அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவதாக தெரிவித்தார். காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தால் ஊழியர்களுக்கு வேலைப் பளுவும் பணிச்சுமையும் கடுமையாக அதிகரித்துள்ளது என்றும் அசுத்தமான காலி பாட்டில்களை ஊழியர்களே கையாண்டு வருவதாக தெரிவித்தார். இப்போதைக்கு இத்திட்டப் பிரச்சனைகளுக்கு 15 நாட்களுக்குள் தீர்வு காண்பதாகத் துறை அமைச்சர் விக்னேஷ் உறுதியளித்துள்ளார் ஒரு மாத கால அவகாசம் கேட்ட நிலையிலும், ஒரு மாதமாகியும் காலி பாட்டில் திட்டத்தில் எந்தவொரு மாற்றத்தையும் அவர் கொண்டு வரவில்லை என்று குறிபிட்டார்.
அமைச்சரின் சமீபத்திய பேட்டிகள் குறித்துப் பேசிய அவர், துறை அமைச்சர் தனது பேட்டிகளில் ஊழியர்களை ஒருமையில் பேசுவதும், திருடர்கள் என்பது போல சித்தரிப்பதும் அமைச்சரின் மாண்புக்கு அழகல்ல என்றும். கடை ஊழியர்களின் உண்மையான பிரச்சனைகள் என்ன என்பதைப் புரிந்து கொள்ள தொழிற்சங்கங்களுடன் அரசு கலந்தாலோசிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நாளை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்திலும், வரவிருக்கும் பட்ஜெட்டிலும் முதலமைச்சர் மற்றும் துறை அமைச்சர் ஆகியோர் டாஸ்மாக் ஊழியர்களின் பணி வரன்முறை மற்றும் காலமுறை ஊதியம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். பட்ஜெட்டுக்குப் பிறகும் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், அடுத்தகட்டமாகப் போராட்டம் மிகவும் தீவிரமடையும் என்று தெரிவித்தார்.
