சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினர், தமிழகம் முழுவதும் கடந்த 12 நாட்களாக பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாகையில் இன்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில்
நூற்றுக்கும் மேற்பட்ட இடைநிலை பதிவு, மூப்பு ஆசிரியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். அப்போது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி தமிழக அரசு சம வேலைக்கு,சம ஊதியம் வழங்க வேண்டும் என்றும், ஆசிரியர்களுக்கு வெவ்வேறு அடிப்படையில் சம்பளம் வழங்குவதை அரசு தவிர்க்க வேண்டும் என்றும், அடிப்படை ஊதியத்தில் உள்ள வித்தியாசத்தை களைய வேண்டும் என்றும் உண்ணாவிரத போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.
மேலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுக்கும் வகையில், ‘உங்கள் பிறந்தநாளில்’ ‘குடும்பத்துடன் போராடும் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றிடுக’ என இடைநிலை ஆசிரியர்கள் உருக்கத்துடன் கோஷங்களை எழுப்பினர்.