அரியலூர் மாவட்டத்தில் நபரை பருவ நெல் சாகுபடி சுமார் 50,000 ஹெக்டேரில் விவசாயிகள் செய்துள்ளனர். விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்ய அரியலூர் மாவட்டத்தில் பல இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதில் கோவிந்தபுத்தூர் என்ற கிராமத்தில் திறக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையத்திற்கு தேவையான சாக்குகளை அரியலூரில் இருந்து லாரியில் ஏற்றி இன்று கோவிந்தபுத்தூர் கிராமத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். லாரி ஓட்டுநர் சாமிநாதன் கோவிந்தபுத்தூர் கிராமத்திற்கு ஓட்டிச் சென்ற பொழுது மேலே சென்ற மின்சார கம்பிகளின் மேல் சாக்கு கட்டுகள் மோதி உள்ளது. மின்சார கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து ஏற்பட்ட தீயினால் சாக்கு கட்டுகள் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதனையடுத்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து லாரியில் இருந்த சாக்கு கட்டுகளை கீழே தள்ள முயற்சி செய்துள்ளனர். ஆனால் தீ மற்ற சாக்கு கட்டுகளிலும் பரவியுள்ளது.
இதனை எடுத்து லாரியை இக்கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோவில் திருக்குளத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கே ஜேசிபி இயந்திரத்தின் மூலம் லாரியில் இருந்த சாக்கு கட்டுகள் அனைத்தும் கீழே இழுத்து தள்ளப்பட்டுள்ளது. பின்னர் ஜாக்கிரதையாக லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால் பெரும் தீ விபத்திலிருந்து லாரி தப்பித்துள்ளது. இந்த தீ விபத்தில் லாரியில் ஏற்றிக் கொண்டு வரப்பட்ட ஐந்தாயிரம் சாக்குகளும் முழுதும் எரிந்து தீக்கிரையானது. தீயை ஒரு மணி நேரம் போராடி பொது மக்களே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அக்கிராமத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது