Skip to content
Home » தஞ்சை அருகே லாரியில் சிக்கி பெண் பரிதாப பலி….

தஞ்சை அருகே லாரியில் சிக்கி பெண் பரிதாப பலி….

தஞ்சை அருகே லாரியை முந்திச் செல்ல முயன்ற போது 14 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற பைக் நிலைத்தடுமாறியதில் பின்புறம் அமர்ந்திருந்த பெண் லாரி டயரில் சிக்கி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தஞ்சை அருகே மேல சோழபுரத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி பிரேமா (50). இவர் தனது தங்கை மகன் முகிலேஸ்வரன் (14) என்பவருடன் பைக்கில் நேற்று காலை தஞ்சையில் உள்ள ஒரு கடைக்கு வந்தார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு பைக்கில் புறப்பட்டனர்.

தஞ்சை நாஞ்சிக்கோட்டை புறவழிச்சாலை பாலம் அருகே சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை முந்தி செல்ல முகிலேஸ்வரன் முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பைக் நிலைத்தடுமாறி லாரி மீது மோதியது. இதில் லாரியின் டயருக்குள் பிரேமா சிக்கினார். இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பிரேமா பலியானார். முகிலேஸ்வரன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்தால் பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேமா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!