தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா திருக்கருகாவூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கோடை பயிராக பருத்தி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கோடையில் நெல், உளுந்து பயிருக்கு மாற்றாக பருத்தி சாகுபடி செய்ய கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பருத்தி சாகுபடியில் அதிக லாபம் கிடைப்பதால் விவசாயிகள் கோடையில் பருத்தியை சாகுபடி செய்து பயனடைந்து வருகின்றனர். நடப்பு ஆண்டு பருத்தி சாகுபடி கடந்த ஆண்டை விட பாபநாசம் தாலுகாவில் அதிக அளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
திருக்கருகாவூர் மற்றும் கரம்பத்தூர், நாகலூர், நிறைமதி, மேல செம்மங்குடி, தேவராயன் பேட்டை, வளத்தாமங்களம், புலிமங்களம், பொன்மான்மேய்ந்தநல்லூர், பண்டாரவாடை, ராஜகிரி, கோபுராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி விதைக்கப்பட்டு 2 வாரங்கள் ஆகிறது. தற்போது பருத்தி செடிகளுக்கு இடையே மண்டியுள்ள களைகளை அகற்றி மருந்து வைக்கும் பருவம் ஆகும். இதனால் பருத்தி செடிகளுக்கு தொழிலாளர்களை கொண்டு களைகளை அகற்றும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.