தஞ்சையில் டூரிஸ்ட் வேனை திருடி சென்ற வாலிபர்…
தஞ்சை அருகே நீலகிரி அருள்பிரகாசம் நகரை சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் தமிழ்ச்செல்வன் (43). தனது டூரிஸ்ட் வேன் மருத்துவக் கல்லூரி சாலை நாலாவது கேட் பகுதியில் நிறுத்தி வைத்திருந்தார். வெளியில் சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது டூரிஸ்ட் வேனை காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழ்ச்செல்வன் இதுகுறித்து மருத்துவக் கல்லூரி போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சத்யன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் புதுக்கோட்டை காந்திநகர் பகுதியை சேர்ந்த கதிரேசன் என்பவரின் மகன் தினேஷ் (19) வேனை திருடி சென்றது தெரிய வந்தது. வேனுடன் தலைமறைவான தினேஷை போலீசார் தேடி வருகின்றனர்.
உடல்நிலை பாதிக்கப்பட்ட முதியவர் நடந்து செல்லும்போது தவறி விழுந்து உயிரிழப்பு..
தஞ்சை அருகே மானாங்கோரை மேலநெடார் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (80). உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர் சம்பவத்தன்று தஞ்சை மேம்பாலம் அருகே நடந்து சென்றபோது கொண்டிருந்தார். திடீரென தவறி கீழே விழுந்து பழனிச்சாமி இறந்தார். இதுகுறித்து பழனிச்சாமியின் மகன் பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
தஞ்சையில் முதியவரை தாக்கிய ரவுடி… போலீசார் வலைவீச்சு
தஞ்சை நியூ பார்த்திமா நகரை சேர்ந்தவர் மைக்கேல் ராஜ் (58). கூலித் தொழிலாளி. இவர் சைக்கிளில் விளார் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபம் அருகே சென்றபோது அங்கு நின்றிருந்த ரவுடி அறிவு என்பவர் சைக்கிளை வழிமறித்து நிறுத்தினார்.
பின்னர் மைக்கேல்ராஜிடம் குடிக்க தண்ணீர் பாட்டில் கொடுக்குமாறு ரவுடி அறிவு கேட்டுள்ளார். அதற்கு தன்னிடம் தண்ணீர் பாட்டில் இல்லை என்று மைக்கேல்ராஜ் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அறிவு மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலால் மைக்கேல் ராஜை தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதில் மைக்கேல்ராஜ் படுகாயமடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் தாலுகா போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து ரவுடி அறிவை தேடி வருகின்றனர். தஞ்சை தாலுகா போலீசில் அறிவு மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.