தஞ்சை பெரியகோவிலில் வராகி அம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். வராகி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். இதில் அம்மனுக்கு நாள்தோறும் அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா கடந்த 18ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.தொடர்ந்து வராகி அம்மனுக்கு இனிப்பு, மஞ்சள், குங்குமம், சந்தனம், தேங்காய்பூ, மாதுளை, நவதானியம், வெண்ணெய், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து இரவு மேளதாளம் முழங்க, பெண்களின் கோலாட்டத்துடன் புஷ்ப அலங்காரத்தில் வராகி அம்மன் புறப்பாடு நடைபெற்றது. முளைப்பாரி வைக்கப்பட்ட தள்ளுவண்டி முன்னே செல்ல சாமி உருவப்பொம்மைகள் பின்தொடர, புஷ்ப அலங்காரத்தில் வராகி அம்மன் தஞ்சை மேலவீதி, வடக்கு வீதி, கீழவீதி, தெற்குவீதி ஆகிய 4 ராஜவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்தனர்.