தஞ்சாவூர் அருகே காசிவிஸ்வநாதர் கோயில் தேரோட்டத்தின் போது பிஎஸ்எப் வீரர் வெயில் தாக்கத்தால் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு யானைக்கால் தெருவை சேர்ந்த சரவணவேல் என்பவரின் மகன் ரமேஷ் (57). இவர் குஜராத் மாநிலத்தில் 84-வது பட்டாலியனில் பிஎஸ்எப் வீரராக பணியாற்றி வந்தார். சொந்த ஊருக்கு விடுமுறைக்கு ரமேஷ் வந்திருந்தார்.
இந்நிலையில் ஒரத்தநாட்டில் உள்ள விசாலாட்சியம்மன் சமேத காசி விசுவநாதர் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம் நடந்தது.இதில் ரமேஷ் கலந்துக்கொண்டு தேரோட்டத்தை வழிநடத்தினர். அப்போது, தேர் கோமுட்டி தெரு பகுதியில் சென்ற போது, தேருடன் சென்றுக்கொண்டு இருந்த ரமேஷ் திடீரென மயங்கி விழுந்தார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கிருந்தவர்கள் ரமேஷை மீட்டு, ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ரமேஷை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்த விட்டதாக தெரிவித்தனர். மேலும், வெயிலின் தாக்கத்தால் அவரது உடல் பாதிக்கப்பட்டதால் மயக்கம் ஏற்பட்டு இறந்ததாக கூறியுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த ஒரத்தநாடு போலீஸார் ரமேஷை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ரமேஷூக்கு ஜெயமாலா என்ற மனைவியும், ஆகாஷ் என்ற மகனும், ஆர்த்தி என்ற மகளும் உள்ளனர்.