நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தவெக சார்பில், சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு ஆதரவு தெரிவித்து பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் சவுமியா அன்புமணி, நீட் தேர்வால் வசதி படைத்த மாணவர்களுக்கே மருத்துவ படிப்பில் சேர அதிக வாய்ப்பு கிடைப்பதாக குறிப்பிட்டார்.
கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடியவில்லை. 15 சதவீதம் மதிப்பெண் எடுத்த மாணவர் ரூ.30 லட்சம் கொடுத்து மருத்துவ படிப்பில் சேருவதாக குறிப்பிட்டார். நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையே இல்லை.
ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சராக பாமக தலைவர் அன்புமணி இருந்த வரை நீட் தேர்வை கொண்டு வரவில்லை என்றும் சட்டமன்றத்தில் சவுமியா குறிப்பிட்டார். நீட் தேர்வு என அவர்கள் முன்வைக்கும் காரணம் இரண்டு தான். ஒன்று தரமான கல்வி, இன்னொன்று மருத்துவக்கல்வி வணிகமயமாக இருக்க கூடாது என்கிறார்கள்.
அப்படி பார்த்தால் வருடத்திற்கு 23 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகிறார்கள். ஆனால் 1,40,000 எம்பிபிஎஸ் சீட் தான் உள்ளது. 110 மார்க் எடுத்தால் கூட வசதியான வீட்டு பிள்ளையாக இருந்தால் ரூ.30 லட்சம் வரை கொடுத்து deemed university-ல் மருத்துவ படிப்பில் சேர்ந்து விடுகிறார்கள். ஆனால் 570 மதிப்பெண்கள் எடுத்தால் கூட ஏழை வீட்டு பிள்ளையாக இருந்தால் மருத்துவ படிப்பில் சேர முடிவதில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.
